பொழியும் மழை, உருகும் பனியால் கடல் மட்டம் உயரும் அபாயம்


பொழியும் மழை, உருகும் பனியால் கடல் மட்டம் உயரும் அபாயம்
x
தினத்தந்தி 16 March 2019 1:14 PM GMT (Updated: 16 March 2019 1:14 PM GMT)

கிரீன்லாந்து பகுதியில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆர்ட்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது ஆச்சரியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அங்கிருக்கும் அனைத்துப் பனிக்கட்டிகளும் உருகினால், கடல்நீர் மட்டம் 7 மீட்டர் அளவுக்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

காற்றில் உள்ள ஈரப்பதம்தான் மழைக்குப் பதிலாக பனியாகப் பொழிகிறது. இதனால், வெயில் காலத்தில் பனி உருகுவதை இது சமநிலைப்படுத்தும்.

உலகில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பனி உருகுகிறது என்று காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

மழைப் பொழிவு பதிவு செய்யப்பட்டபோது, 20 தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளோடு, இந்தப் புகைப்படங்களைச் சேர்த்தனர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், ‘தி கிரையோஸ்பியர்’ என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டன. அதில், ஆரம்பக்கட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின்போது இரண்டு முறை மழை பொழிந்தது. அதுவே 2012-ம் ஆண்டு 12 முறையாக உயர்ந்துள்ளது.

1979-2012-ம் ஆண்டுக்குள், 300 தடவைகளுக்கு மேல், மழைப் பொழிவானது பனிக்கட்டிகள் உருகுவதைத் தூண்டியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குளிர்காலத்தில் மழைப் பொழிவு இருப்பது எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார், ஜெர்மனியில் உள்ள ஜியோமார் கடல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரிலெனா ஓல்ட்மான்ஸ். இவர்தான் இந்த ஆராய்ச்சியையும் வழிநடத்துகிறார்.

‘‘இது ஏன் நடக்கிறது என்பது புரிகிறது. தெற்கில் இருந்து வரும் வெப்பக்காற்றுதான் இதற்குக் காரணம். ஆனாலும், இது மழைப் பொழிவுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது’’ என்கிறார் அவர்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு பேராசிரியரான கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்கோ டெடெஸ்கோ கூறுகையில், மழை அதிகரிப்பு இதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

குளிர்காலத்தில் மழை பொழிந்தாலும், அது மீண்டும் உடனடியாக உறைந்து, பனி மேற்பரப்பின் தன்மையை மென்மையாகவும் அடர்த்தியாகவும் மாற்றிவிடும். வெயில்காலத்தில் விரைவாக பனி உருகும் சூழலை முன்கூட்டியே அது ஏற்படுத்திவிடும்.

பனி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ, அவ்வளவு வெப்பத்தை அது உள்வாங்கிக் கொள்ளும். இது பனியை விரைவாக உருகச் செய்யும்.

அட்லான்டிக் பெருங்கடலின் வடக்கு மூலையில் இருக்கும் பெரும் பகுதிதான் கிரீன்லாந்து. அங்கு பெருமளவில் பனி இருப்பதால், அங்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

நிலையான நேரங்களில், கோடைக்காலத்தில் உடைந்து உருகும் பனிக்கட்டிகளை, குளிர்காலத்தின் பனிப்பொழிவு சமன்படுத்தும்.

ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில், பெரும் அளவிலான பனிக்கட்டிகளை அப்பகுதி இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இது கடல் மட்ட உயர்வில் சிறு பங்கு மட்டுமே வகிக்கிறது என்றாலும், காலநிலை மாற்றத்தால், உருகும் நீரின் அளவு அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதிகளவில் பாசி வளர்வதால், கிரீன்லாந்தில் பனி அடர்த்தியாகி, இதனால் வேகமாக உருகும் பனிக்கட்டிகளால் ஏற்படும் அபாயம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ட்டிக் பகுதிக்குச் செல்லும் மாசு கலந்த காற்றால், அங்கு பாசி உருவாகிறது. உலகின் மற்ற பகுதிகளை விட, ஆர்ட்டிக் பகுதி இருமடங்கு அதிகமாக வெப்பமாகி வருகிறது.

இது ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் காலநிலை தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Next Story