புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடித்த தம்பதி


புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடித்த தம்பதி
x
தினத்தந்தி 24 March 2019 7:41 AM GMT (Updated: 24 March 2019 7:41 AM GMT)

புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றிகண்டிருக்கிறார்கள், தமிழக தம்பதியினர். கணவர் விஜய் திருவேங்கடம் - மனைவி சிவப்பிரியா கிருபாகரன்.

புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றிகண்டிருக்கிறார்கள், தமிழக தம்பதியினர். கணவர் விஜய் திருவேங்கடம் - மனைவி சிவப்பிரியா கிருபாகரன். 39 வயதாகும் சிவப்பிரியா சென்னை, எண்ணூர் சத்தியவாணி முத்துநகரை சேர்ந்தவர். விஜய் திருவேங்கடத்தின் பூர்வீகம் தஞ்சாவூர். ஆனால் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவம் படித்து டாக்டராகி சேவை செய்ய விரும்பிய இவர்கள் இருவரும், அதற்கான வாய்ப்பு கைகூடாநிலையில் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதித்திருக்கிறார்கள். தங்களுடைய கண்டுபிடிப்பு மூலம் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுவிடவாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இருவரும் தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள காந்திநகர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பி.எச்டி. பட்டம் பெற்றவர்கள்.

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான முயற்சியில் உலகளவில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் அவை புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையிலும், மேலும் பரவாமல் கட்டுக்குள் வைத்திருக்கும் விதத்திலுமே அமைந்திருக்கின்றன. பூரணமாக புற்றுநோயை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பது சவாலான காரியமாகவே இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில்தான் விஜய் திருவேங்கடம் - சிவப்பிரியா கிருபாகரன் தம்பதியர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இவர்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணத்தையும் கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி மருத்துவதுறை விஞ்ஞானியான பேராசிரியை சிவப்பிரியா கூறுகிறார்:

‘‘நான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன். திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் அதற்கான நுழைவுத்தேர்வும் எழுதினேன். அதில் நல்ல கட் ஆப் மதிப்பெண் பெற்றேன். ஆனாலும் சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கவில்லை. எனக்கு வேதியியல் பாடம் ரொம்ப பிடிக்கும். அதில் 198 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதனால் எத்திராஜ் கல்லூரியில் வேதியியல் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரி படிப்பை முடித்ததும் வேதியியல் படிப்பு மீதான ஈடுபாட்டால் சென்னை பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் படிப்பை தேர்ந்தெடுத்தேன்.

வேதியியலில் எனது கல்வி ஆர்வத்தை பார்த்ததும் பேராசிரியர் பி.சி.ஸ்ரீனிவாசன் என்னை பி.எச்டி. ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தினார். அப்போது கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு நடந்த துறை சார்ந்த பயிற்சி முகாமில் நாங்கள் 40 பேர் பங்கேற்றோம். அங்கு பேராசிரியர் விஸ்வநாதனின் ஆராய்ச்சிகள் எனக்கும் ஆய்வு சார்ந்த படிப்பை மேற்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது. வேதியி யலையும், மூலக்கூறுகளையும் மையப்படுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ள தீர்மானித்தேன்.

கல்லூரி இறுதி ஆண்டில் கரிம வேதியியலில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கினேன். அது கொடுத்த உத்வேகத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் பி.எச்டி. ஆய்வு படிப்பில் சேர்ந்தேன். பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். அப்போதே ஏதாவதொரு புதிய மருந்தை கண்டு பிடிக்க வேண்டும். அது உலக மக்களுக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். பி.எச்டி. ஆய்வின்போது முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாமுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது அவர் எங்களிடம், ‘உங்களுடைய ஆராய்ச்சிகள் ஏழை எளிய மக்களுக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும். நீங்கள் கண்டுபிடிக்கும் பொருள் மலிவு விலையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்’ என்றார். அவருடைய எண்ணமும், என்னுடைய வேதியியல் அறிவும், புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆர்வத்திற்கு அடித்தளமிட்டது’’ என்கிறார், சிவப்பிரியா.

பெங்களூருவில் பி.எச்டி படிப்பை முடித்துவிட்டு தனது ஆராய்ச்சி திறமையை மெருகேற்றிக்கொள்ள 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல் கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். இவருடைய கணவர் விஜய் திருவேங்கடம் இயற்பியலில் முது கலைப்பட்டம் பெற்றவர். அதைத்தொடர்ந்து பெங்களூரு இந்திய ஆராய்ச்சி கழகத்திலும், குவாலியர் டி.ஆர்.டி.ஓ.விலும் பி.எச்டி பட்டம் பெற்றவர். சிவப் பிரியாவை போன்று ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் கொண்ட அவரும் அமெரிக்கா சென்று மனைவியுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். அங்குள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களில் இருவரும் ஆராய்ச்சியை தொடர்ந்திருக்கிறார்கள்.

‘‘உலகளவில் 200 வகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. நாங்கள் ஆராய்ச்சி செய்த டேனா சார்பர் மையத்தில், புற்றுநோய்க்கான பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் அங்கு புற்று நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினோம். ஒருகட்டத்தில் எங்கள் சிந்தனையில் சிலவிதமான தெளிவுகள் ஏற்பட்டன. இந்தியர்களின் மரபணுக்களும், அமெரிக்கர்களின் மரபணுக்களும் வேறு வேறாக இருக்கிறது. நம்முடைய மரபணுக்களை சார்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் அது நமது நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற தெளிவோடு அமெரிக்காவில் இருந்து 2013-ம் ஆண்டு இந்தியா திரும்பினோம். குஜராத் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். அங்கு பிஎச்டி. படிக்கும் மாணவர் குழுவுடன் ஆராய்ச்சியை தொடர்ந்தோம்’’ என்கிற சிவப்பிரியா கணவருடன் இணைந்து பெண்களை தாக்கும் மார்பகப்புற்றுநோய், ஆண்களை தாக்கும் புராஸ்டேட் புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடித்திருக்கிறார். மற்ற புற்றுநோய் மருந்துகளில் இருந்து தங்களுடைய மருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை அவர் விளக்குகிறார்.

‘‘நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 500-க்கும் மேற்பட்ட கைனேஸ் எனப்படும் என்சைம்கள் இருக்கின்றன. இதில் ஒருசில கைனேஸ்கள் பாதிப்புக்குள்ளானாலோ, சரியாக இயங்கவில்லை என்றாலோ புற்றுநோய் தோன்றக் கூடும். அப்போது இயல்புக்கு மாறாக மற்ற செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து உடல் எங்கும் பரவ தொடங்கும். அதை தொடர்ந்து கைனேஸ்களும் பலமடங்கு பெருகும். புற்றுநோயை உருவாக்கக்கூடிய அத்தைகய கைனேஸ்களை கண்டறிந்து, அவைகளை செயலிழக்கச் செய்யும் மூலக் கூறுகளை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்.

பொதுவாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர் சிகிச்சை, வேதி சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் பலருக்கு பலன் அளித்தாலும், பின் விளைவுகளையும் ஏற் படுத்திவிடுகின்றன. முடி உதிர்வு, வாந்தி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சினைகளை பலரும் எதிர்கொள்கிறார்கள். லட்சக்கணக்கில் பணமும் செலவிட வேண்டியிருக்கிறது.

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது புற்றுநோய் செல்கள் மட்டுமின்றி உடலில் உள்ள நல்ல செல்களும் அழிக்கப்படுகின்றன. நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மூலக்கூறுகள் குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கும். அதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்று நம்புகிறோம். ஆய்வகத்தில் மனித செல்களுடன் நாங்கள் கண்டுபிடித்திருக்கும் புற்றுநோய் மூலக்கூறுகளை பரிசோதித்து பார்த்ததில் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது. எங்களது கண்டுபிடிப்பு மருத்துவதுறையில் உலக புகழ் பெற்ற நேச்சர் சைன்டிபிக் ரிப்போர்ட் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக் கிறோம்.

கண்டுபிடிப்பு நிறைவடைந்ததும், நம் நாட்டிலேயே குறைந்த விலையில் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க முயற்சிப்போம். எங்களுடைய ஆராய்ச்சிக்கு காந்திநகர் ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் சுதிர் ஜெயின், கே.வெங்கடேசன், டாக்டர் சந்தா ஆகியோர் உறுதுணையாக இருக்கிறார்கள். எனது சித்தப்பா ரகுநாதனும் என்னை ஊக்குவித்தார்’’ என்கிறார்.

சிவப்பிரியாவின் தந்தை கிருபாகரன் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் ராணி குடும்பத்தலைவி. இருவரும் மகளின் ஆராய்ச்சிகளுக்கு பக்கபலமாக இருந்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தம்பி கிஷோர்குமார் சாப்ட்வேர் என்ஜினீயர். விஜய்-சிவப்பிரியா தம்பதிகளின் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில் காவல்துறையை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நட்ராஜ், ஜெகன் சேஷாத்ரி மற்றும் முகிலன், நீதிராஜ் ஆகியோர் செயல்பட்டிருக்கிறார்கள்.

விஜய் - சிவப்பிரியா தம்பதியர், வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும் எச்.பைலோரி என்ற பாக்டீரியாவை அழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் முதல்கட்ட வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

‘‘எச்.பைலோரி என்ற பாக்டீரியா அல்சர் பிரச்சினையை உண்டாக்கக்கூடியது. நாளடைவில் பாதிப்பு தீவிரமடைந்து குடல் புற்றுநோயாக மாறி உயிருக்கு பங்கம் விளைவித்து விடும். ஆரம்பத்தில் வயிற்றுப்புண்ணாகத் தோன்றும். இந்தியாவில் நிறையபேருக்கு இ்த்தகைய வயிற்றுப் பாதிப்பு இருக்கிறது. இந்த எச்.பைலோரி பாக்டீரியாவை முழுமையாக அழிக்கக்கூடிய மருந்துகள் இல்லை. இதற்கு உலகளவில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறை கடைப்பிடிக்கப்படுகிறது. நாங்கள் எச்.பைலோரியை அழித்து நோயை குணப்படுத்தும் மருந்தையும் கண்டுபிடித்துள்ளோம்’’ என்கிற சிவப்பிரியா, பெண்கள் புற்றுநோயிடம் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

‘‘புற்றுநோயின் ஆரம்பகட்ட நிலையை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. 70 சதவீத நோயாளிகளுக்கு மூன்றாவது, நான்காவது கட்ட நிலையில்தான் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் விஷயம் தெரியவருகிறது. தொடக்கத்திலே கண்டறிய ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ரத்த புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவை ஆபத்தானவை. மார்பக புற்றுநோய் இருக்கிறதா? என்பதை கண்டறிய பெண்கள் வீட்டிலேயே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். அதுபற்றிய விழிப்புணர்வு இருந்தும் பெண்கள் அதை செய்ய தயங்கு கிறார்கள். முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு உருவானது. இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம் போன்றவை அதற்கு காரணம். கருப்பை வாய் புற்றுநோயும் இப்போது பெண்களை அதிகம் தாக்குகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், போலியோவுக்கு தடுப்பூசி இருப்பதுபோல், கருப்பை வாய் புற்றுநோய்க்கும் தடுப்பூசி உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 6 ஆண்டுக்கு ஒருமுறை இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால், கருப்பை வாய் புற்றுநோய் தாக்காது” என்கிறார் சிவப்பிரியா.

இந்த தம்பதிகளின் ஆராய்ச்சிகள் நிறைவுபெற்று, இவர்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்துகள் மக்களுக்கு விரைவில் பயன்பட வேண்டும்!

Next Story