வளர்ப்பு நாய்களுக்கான உணவு

நாய்களுக்கு உணவு அளிப்பதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக்கூடாது.
வளர்ப்பு நாய்களுக்கான உணவு அளிப்பதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக்கூடாது. சாதாரணமாக தினசரி நாய்களுக்கு 8 மணி நேர இடைவெளியில் மூன்று முறை உணவு அளிக்கலாம்.
காலை நேரத்தில் பாலும் இரவில் அளவான உணவும் மதியம் சத்தான உணவும், தேவைக்கு ஏற்றவாறு அளிக்கலாம். இடையில் நாய்களுக்கு சிறிதளவு ரொட்டி, பிஸ்கட் கொடுக்கலாம். நாய்களுக்கு மோப்ப உணர்வு அதிகமாக உள்ளதால் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவினை முதலில் முகர்ந்து பார்த்துப் பின்னரே உண்ணும். ஆகவே, அவற்றிற்கு அளிக்கப்படும் உணவு எந்த வகையான உணவாக இருந்தாலும் சுத்தமான புதிய உணவாக இருக்க வேண்டும்.
நாய்களுக்கான உணவில் 40 சதவீதம் இறைச்சி, 30 சதவீதம் காய்கறி மற்றும் 30 சதவீதம் மாவுச்சத்துக்கான பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சைவ உணவு கொடுக்கும்போது இறைச்சிக்குப் பதிலாக பயறு வகை மற்றும் பருப்பு வகையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கெட்டுப்போன உணவுப் பண்டங்களை உபயோகித்தல் கூடாது. உண்டு முடித்த பின்னர் மீதமுள்ள உணவை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு தெருக்களில் எறியப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிட அனுமதிக்கக்கூடாது. கோடைக்காலத்தில் நாய்கள் குறைந்தஅளவே உணவு உட்கொள்ளும். ஆகையால் சைவ உணவு உட்கொள்ளும் நாய்களுக்கு தேவையான அளவு எரிசக்தி கிடைப்பது இல்லை. இந்த நேரங்களில் உணவுடன் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம்.
உணவுடன் தாது மற்றும் உயிர்ச்சத்துக்கள் கொடுக்க வேண்டும். தேவைக்கு அதிகஅளவு கால்சியம், மீன் எண்ணெய் கொடுப்பதால் எலும்புக் கோளாறுகள் ஏற்படும். வாசனைப் பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். உணவுகளையும், உணவிடும் நேரத்தையும் அடிக்கடி மாற்றம் செய்தல் கூடாது.
நாய்களுக்கு கொடுக்கப்படும் சில உணவுகள் கெடுதலை தரும். சாக்லேட், காபி மற்றும் டீ போன்றவை அளித்தால், அதில் உள்ள புரோமின் என்னும் வேதிப்பொருள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இவற்றை சாப்பிடும் போது நாய்களுக்கு சோர்வு, வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படும். திராட்சை மற்றும் உலர் திராட்சைகளை நாய்கள் சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கும்.
செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. இவை சிறுநீரகத்தை பெரிதளவு பாதிக்கும். வேகவைக்காத இறைச்சியை நாய்கள் சாப்பிட்டால் அவற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் நாய்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். நாய்களுக்கு உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதேபோல் வெங்காயம் மற்றும் பூண்டு அதிக அளவில் சேர்ந்தால் ரத்த சோகை ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும் என கால்நடை டாக்டர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story






