நிதி நிலை முடிவுகள் சீசன் ஆரம்பமாகிறது


நிதி நிலை முடிவுகள் சீசன் ஆரம்பமாகிறது
x
தினத்தந்தி 8 April 2019 4:38 AM GMT (Updated: 8 April 2019 4:38 AM GMT)

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க இருக்கும் முக்கிய காரணிகள் சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு

மும்பை

நிதி நிலை முடிவுகள் சீசன் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க இருக்கும் முக்கிய காரணிகள் குறித்து சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நிகர ஏற்றம்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 189.32 புள்ளிகள் அதிகரித்து 38,862.23 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 42.95 புள்ளிகள் முன்னேறி 11,665.95 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நடப்பு வாரத்தில் பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி, ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான நிறுவன நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களை தீர்மானிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்துறை உற்பத்தி

பிப்ரவரி மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி மற்றும் மார்ச் மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரங்கள் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளன. ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது என்பதால் நடப்பு வாரத்தில் இந்தப் புள்ளிவிவரங்கள் பங்குச்சந்தை வட்டாரங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். பிப்ரவரியில் சில்லரை விற்பனை விலை பணவீக்கம் 2.57 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் 8 முக்கிய துறைகளின் பங்கு 41 சதவீதமாக உள்ளது. எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி, பிப்ரவரி மாதத்தில் 2.1 சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டு இருக்கிறது. எனவே அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் ஓரளவு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.7 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

நிதி நிலை முடிவுகள்

இந்த வாரத்தில் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் முடிவுகள் சீசன் ஆரம்பமாகிறது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), இன்போசிஸ் ஆகிய முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் தமது மார்ச் காலாண்டு மற்றும் 2018-19 நிதி ஆண்டுக்கான நிதி நிலை முடிவுகளை வெள்ளிக்கிழமை அன்று பங்கு வியாபாரம் முடிந்த பிறகு வெளியிட உள்ளன.

மேலும், டாட்டா மெட்டாலிக்ஸ், டெல்டா கார்ப், பஜாஜ் கன்ஸ்யூமர் கேர், டின்பிளேட் கம்பெனி, ஜி.டி.பி.எல். உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. குறுகிய கால அடிப்படையில் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும்.

புள்ளிவிவரங்கள்

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகத்தின் போக்கு இருக்கும். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதன்படியும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

ரபி பருவ (2018 அக்டோபர்-2019 மார்ச்) பயிர்கள் சாகுபடி நிறைவடைந்துள்ள நிலையில் அது பற்றிய தகவல்களும் சந்தைகளின் வளர்ச்சியை தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது. உணவு தானியங்கள் உற்பத்தி பற்றிய மதிப்பீடுகளும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நிலவரங்கள்

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் சர்வதேச நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Next Story