கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து ரூ.412 கோடி வெளியேறியது


கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து ரூ.412 கோடி வெளியேறியது
x
தினத்தந்தி 11 April 2019 5:33 AM GMT (Updated: 11 April 2019 5:33 AM GMT)

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து ரூ.412 கோடி வெளியேறியது

புதுடெல்லி

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையின் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து ரூ.412 கோடி வெளியேறி இருக்கிறது.

தங்கத்தில் முதலீடு

பரஸ்பர நிதி துறையின் கோல்டு ஈ.டி.எப். திட்டம் தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் போன்றவற்றை நேரடியாக வாங்கும்போது அதன் தரத்தை மதிப்பீடு செய்வது சிரமம். மேலும் அவற்றை பாதுகாப்பதில் இடர்பாடுகள் உள்ளன. அதே சமயம் பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்தால் இது போன்ற தொல்லைகள் இருக்காது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யூனிட்டுகள் வழங்கப்படும். இவை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன. எனவே இந்த யூனிட்டுகளை பங்குகளை போன்று எளிதில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும்.

தொடர் வெளியேற்றம்

கடந்த சில நிதி ஆண்டுகளாக கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து முதலீடு தொடர்ந்து வெளியேறி வந்திருக்கிறது. 2013-14-ஆம் நிதி ஆண்டில் இத்திட்டங்களில் இருந்து ரூ.2,293 கோடி விலக்கப்பட்டது. 2014-15-ஆம் ஆண்டில் ரூ.1,475 கோடியும், 2015-16-ல் ரூ.903 கோடியும் வெளியேறி இருந்தது. 2016-17-ல் ரூ.775 கோடி விலகியது. சென்ற 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ.835 கோடி வெளியேறியது. சென்ற நிதி ஆண்டிலும் (2018-19) இந்த போக்கு நீடித்தது.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து ரூ.55 கோடி விலகி இருந்தது. பிப்ரவரி மாதத்தில் ரூ.14 கோடி வெளியேறியது. மார்ச்சில் ரூ.38 கோடி விலகி இருக்கிறது. மார்ச் வரையிலான 12 மாதங்களில் மொத்தம் ரூ.412 கோடி விலகி உள்ளது.

தொடர் வெளியேற்றம் காரணமாக இந்தப் பிரிவில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் ஜனவரி மாதத்தில் இப்பிரிவின் சொத்து மதிப்பு 3.5 சதவீதம் (ரூ.161 கோடி) உயர்ந்து ரூ.4,732 கோடியாக அதிகரித்து இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 0.1 சதவீதம் (அல்லது ரூ.5 கோடி) உயர்ந்து ரூ.4,737 கோடியாக அதிகரித்தது. மார்ச் மாதத்தில் ரூ.4,699 கோடியாக குறைந்துள்ளது.

முதலீட்டுத் திட்டங்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

தங்கம் விலை

தங்கமும், பங்கும் நேர் எதிர் திசைகளில் பயணம் செய்பவை. பங்கு வர்த்தகம் ஏற்றம் பெறும்போது தங்கம் விலை பொதுவாக குறைந்து விடும். பங்கு வர்த்தகம் சரிவடைந்தால் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது. எனவே தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து இருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story