எரிசக்தி துறையில் 748 கோடி டாலர் அன்னிய முதலீடு


எரிசக்தி துறையில் 748 கோடி டாலர் அன்னிய முதலீடு
x
தினத்தந்தி 11 April 2019 6:25 AM GMT (Updated: 11 April 2019 6:25 AM GMT)

கடந்த 19 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 748 கோடி டாலர் அன்னிய முதலீடு

2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 டிசம்பர் வரையிலான சுமார் 19 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 748 கோடி டாலர் அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

நிலக்கரியை எரிக்காமல், புகை கக்காமல், சாம்பலை குவிக்காமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பசுமை எரிசக்தி ஆகும். பாரம்பரிய முறைகளை தவிர்த்து சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை ஆதாரங்கள் வாயிலாக பெறும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.

நம் நாட்டில், 2022-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசத்தி உற்பத்தி திறனை 1,75,000 மெகா வாட்டாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் சூரியசக்தி மின் உற்பத்தி திறனை 1 லட்சம் மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை மட்டும் 60,000 மெகா வாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2013-14- ஆம் ஆண்டில் இத்துறை 12.92 சதவீத பங்கினைக் கொண்டிருந்தது. 2018 டிசம்பர் இறுதி நிலவரப்படி அது 21.21 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

சர்வதேச அளவில் நம் நாடு மூன்றாவது பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி மையமாகவும், நான்காவது முன்னணி காற்றாலை மின் உற்பத்தி சந்தையாகவும் இருக்கிறது.

இந்நிலையில், 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018 டிசம்பர் வரையிலான சுமார் 19 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 748 கோடி டாலர் அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இத்துறையில், அங்கீகரிக்கப்பட்ட வழியில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை ஆதாரங்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மேலும் இந்த வளங்கள் தீர்ந்து போகும் அபாயமும் இல்லை. எனவே உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.


Next Story