கடன் சந்தை திட்டங்களில் இருந்து ரூ.1.25 லட்சம் கோடி வெளியேறியது


கடன் சந்தை திட்டங்களில் இருந்து ரூ.1.25 லட்சம் கோடி வெளியேறியது
x
தினத்தந்தி 15 April 2019 5:39 AM GMT (Updated: 15 April 2019 5:39 AM GMT)

கடந்த நிதி ஆண்டில், பரஸ்பர நிதி துறையின் கடன் சந்தை திட்டங்களில் இருந்து ரூ.1.25 லட்சம் கோடி வெளியேறியது

புதுடெல்லி

கடந்த நிதி ஆண்டில் (2018-19) பரஸ்பர நிதி துறையின் கடன் சந்தை திட்டங்களில் இருந்து ரூ.1.25 லட்சம் கோடி வெளியேறி இருக்கிறது.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் அது ரூ.23.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, சொத்து மதிப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் இத்துறையின் கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் (வருவாய், லிக்விட், நிதிச்சந்தை மற்றும் கில்ட் ஆகியவை) இருந்து சுமார் ரூ.1.25 லட்சம் கோடி விலகி உள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) இந்த திட்டங்கள் ரூ.9,128 கோடியை மட்டுமே இழந்திருந்தன.

எனினும், கடந்த நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 லட்சம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவு என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களும் அதிக முதலீட்டை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக இத்துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இந்த திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து வருகிறது.

புதிய பங்கு வெளியீடுகள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என கருதப்படுகிறது.



Next Story