பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதிநிலை முடிவுகள் தீர்மானிக்கும்


பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதிநிலை முடிவுகள் தீர்மானிக்கும்
x
தினத்தந்தி 15 April 2019 7:45 AM GMT (Updated: 15 April 2019 7:45 AM GMT)

இந்தவார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும் சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு

மும்பை

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நிகர சரிவு

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நிகர அடிப்படையில் 95.12 புள்ளிகள் சரிவடைந்து 38,767.11 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.50 புள்ளிகள் இறங்கி 11,643.45 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நடப்பு வாரத்தில் மார்ச் மாத வர்த்தக நிலவரம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் உலக நிலவரங்கள் பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களை தீர்மானிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் பற்றிய புள்ளிவிவரம் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் பணவீக்கம் 2.93 சதவீதமாக இருந்தது. ஜனவரி மாதத்தில் அது 2.76 சதவீதமாக இருந்தது.

சென்ற வாரத்தில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), இன்போசிஸ் ஆகிய முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் தமது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டன. நடப்பு வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எச்.டீ.எப்.சி. வங்கி, ஆர்.பீ.எல். வங்கி, மைண்ட்ரீ, ஐசிஐசிஐ லோம்பார்டு இன்சூரன்ஸ் உள்பட பல நிறுவனங்கள் தமது நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. குறுகிய கால அடிப்படையில் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சரக்குகள் ஏற்றுமதி

இன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு மார்ச் மாதத்திற்கான நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிட வாய்ப்பு உள்ளது. இது சந்தை வட்டாரங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் அம்சமாக இது இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2.44 சதவீத வளர்ச்சி கண்டு 2,670 கோடி டாலரை எட்டி இருந்தது. அந்த மாதத்தில் இறக்குமதி 5.41 சதவீதம் குறைந்து 3,626 கோடி டாலராக இருந்தது. எனவே வர்த்தக பற்றாக்குறை 960 கோடி டாலராக குறைந்தது.

புள்ளிவிவரங்கள்

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதன்படியும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

ரபி பருவம் (2018 அக்டோபர்-2019 மார்ச்) நிறைவடைந்துள்ள நிலையில் அது பற்றிய தகவல்களும் சந்தைகளின் வளர்ச்சியை தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது. உணவு தானியங்கள் உற்பத்தி பற்றிய மதிப்பீடுகளும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் உலக நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Next Story