சென்செக்ஸ் 139 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 47 புள்ளிகள் முன்னேறியது


சென்செக்ஸ் 139 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 47 புள்ளிகள் முன்னேறியது
x

வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 139 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 47 புள்ளிகள் முன்னேறியது

மும்பை

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்கு வியாபாரம் ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 47 புள்ளிகள் முன்னேறியது.

நிதி நிலை முடிவுகள்

டி.சி.எஸ்., இன்போசிஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருப்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் மற்ற ஆசிய நாடுகளில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்ததும், ஐரோப்பாவில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியதும் இந்திய பங்குச்சந்தைகளுக்கு ஊக்கம் அளித்தன. எனவே மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்தும் அது பங்கு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

அந்த நிலையில் மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்கள் உயர்ந்தன. அதில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.57 சதவீதம் அதிகரித்தது. அடுத்து வாகன துறை குறியீட்டு எண் 1.43 சதவீதம் உயர்ந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், கோல் இந்தியா, டாட்டா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், கோட்டக் மகிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், எச்.டீ.எப்.சி. வங்கி, பஜாஜ் ஆட்டோ, என்.டி.பி.சி. உள்பட 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் இன்போசிஸ், சன் பார்மா, யெஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி., எச்.டீ.எப்.சி., ஐசிஐசிஐ வங்கி, ஏஷியன் பெயிண்ட், எல் அண்டு டி, ஐ.டி.சி. உள்ளிட்ட 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 138.73 புள்ளிகள் அதிகரித்து 38,905.84 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,976.58 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,780.08 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,455 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,128 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 217 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,707 கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,396 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 46.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,690.35 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,704.60 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,648.25 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story