தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்?


தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்?
x
தினத்தந்தி 19 April 2019 6:52 AM GMT (Updated: 19 April 2019 6:52 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியில் வருமானத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த சோதனைகளில் ரூ.138.57 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 16-ந் தேதி மட்டும் ரூ.3.16 கோடி பிடிபட்டது. இதில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் ரூ.1.41 கோடி சிக்கியது. வருமானத்துறையினர் மட்டும் மேற்கொண்ட சோதனையில் ரூ.56.55 கோடி சிக்கியுள்ளது. தேனியில் பிடிபட்ட பணம் இதில் இன்னும் சேர்க்கப்படவில்லை.

இதுவரை ரூ.43.54 லட்சம் மதிப்புள்ள மது ரூ.37.68 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயிரத்து 22 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி உள்ளிட்ட மதிப்பு அதிகமுள்ள பொருட்களும் பிடிபட்டுள்ளன. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் பணபட்டுவாடாவின் போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்களிக்க பணம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்குரிய குற்றங்கள். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சோதனையில் சிக்கும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காட்டினால், எடுத்துச் சென்றவை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டவை திரும்பக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் பணத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் அந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராத பட்சத்தில் அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைப்பார்கள். பறக்கும் படையினரிடம் சோதனையில் சிக்கும் பணம் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அதன் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். அந்தப்பணத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காட்டாத பட்சத்தில் அந்தப்பணம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.

- நீடாமங்கலம் கோபாலசாமி,  முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.

Next Story