முதலீடும் வாரிசு நியமனமும்


முதலீடும் வாரிசு நியமனமும்
x
தினத்தந்தி 27 April 2019 5:00 AM GMT (Updated: 26 April 2019 12:26 PM GMT)

ஒவ்வொரு முறையும் முதலீட்டுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது, அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், பரஸ்பர நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும்.

 அதில் உங்கள் நாமினி (வாரிசுதாரர்) பற்றிய குறிப்பைத் தருமாறு கேட்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.

நாமினி என்பவர் யார்? நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம் அல்லது வங்கிக் கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நேர்ந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள்.

சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.

நாமினியாக ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கிக் கணக்கிலும், முதலீட்டிலும் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இது சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், சில நேரங்களில் கோர்ட்டு ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகின்றன. வங்கிக்குத் தேவையான ஆவணங்கள் கிடைக் கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், ஒருவர் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடும்.

வங்கிக் கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் நாமினி நியமனம் தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவுக்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்தபிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள்.

புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பேங்க் லாக்கர் கணக்குக்கும் நாமினி அவசியம் தேவை.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ரூ. 8 ஆயிரம் கோடி, கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ளது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமலும் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சினை என்பதை இவற்றில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

எனவே நாம், வங்கிக்குச் சென்று நமது கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி நாம் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுவாக பெண்கள் இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்குரிய பணமும் பறிபோகக் கூடாது. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Next Story