நிலக்கரி இறக்குமதி செய்த 12 பெரிய துறைமுகங்கள் இந்திய துறைமுகங்கள் சங்கம் தகவல்


நிலக்கரி இறக்குமதி செய்த 12 பெரிய துறைமுகங்கள் இந்திய துறைமுகங்கள் சங்கம் தகவல்
x
தினத்தந்தி 30 April 2019 6:51 AM GMT (Updated: 30 April 2019 6:51 AM GMT)

2018-19-ஆம் நிதி ஆண்டில் 16 கோடி டன் நிலக்கரி இறக்குமதி

புதுடெல்லி

2018-19-ஆம் நிதி ஆண்டில், 12 பெரிய துறைமுகங்கள் ஒட்டுமொத்தமாக 16 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்து இருப்பதாக இந்திய துறைமுகங்கள் சங்கம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

பெரிய துறைமுகங்கள்

இந்தியாவின் நீண்ட கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும், ஏறக்குறைய 200 சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. இதில் கண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மர்ம கோவா, புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 முக்கிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

2017-18-ஆம் நிதி ஆண்டில் இத்துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள் 67.94 கோடி டன்னாக இருந்தது. இது 4.77 சதவீதம் உயர்வாகும். கடந்த நிதி ஆண்டில் (2018-19), 12 பெரிய துறைமுகங்கள் மொத்தம் 69.90 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 2.90 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி, உரம், பெட்ரோலிய பொருள்கள் மற்றும் கண்டெய்னர்கள் அதிக அளவில் கையாளப்பட்டதே இதன் பின்னணியாக இருக்கிறது.

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

சென்ற நிதி ஆண்டில், 12 பெரிய துறைமுகங்களில் 16 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது 15 கோடி டன்னாக இருந்தது. ஆக, 12 பெரிய துறைமுகங்களின் நிலக்கரி இறக்குமதி 11 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் 10 கோடி டன் சாதாரண நிலக்கரி இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது 9.53 கோடி டன்னாக இருந்தது. இத்துறைமுகங்களின் உயர்தர நிலக்கரி இறக்குமதி (5 கோடி டன்னில் இருந்து) 5.75 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது.

எதிர்வரும் 2019-20-ஆம் நிதி ஆண்டில் இந்த துறைமுகங்கள் கையாளும் சரக்குகள் 6-8 சதவீதம் உயரும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் கண்டெய்னர்கள் கையாளும் திறன் அதிகரித்து வருவதே இதன் காரணமாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி

நாட்டின் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் 12 பெரிய துறைமுகங்கள் 61 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. இந்த துறைமுகங்களில் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Next Story