நடப்பு சந்தை பருவத்தில் இதுவரை 55.17 லட்சம் டன் கோதுமை கொள்முதல்


நடப்பு சந்தை பருவத்தில் இதுவரை 55.17 லட்சம் டன் கோதுமை கொள்முதல்
x
தினத்தந்தி 1 May 2019 4:03 AM GMT (Updated: 1 May 2019 4:03 AM GMT)

இதுவரை 55.17 லட்சம் டன் கோதுமை கொள்முதல்

புதுடெல்லி

நடப்பு 2019-20 சந்தை பருவத்தில் இதுவரை மத்திய, மாநில அரசு முகமைகள் 55.17 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளன.

கரீப், ரபி

நம் நாட்டில் கரீப், ரபி ஆகிய இரண்டு பருவங்களில் சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடைகிறது. அக்டோபர்-மார்ச் மாத காலம் ரபி பருவமாகும். இந்தப் பருவத்தில் கோதுமையே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த வேளாண் பருவத்தில் (2017 ஜூலை-2018 ஜூன்) 9.97 கோடி டன் கோதுமை உற்பத்தியாகி இருந்தது. நடப்பு 2018-19 பருவத்தில் கோதுமை விளைச்சல் 10 கோடி டன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோதுமை கொள்முதல் பருவம் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. என்றாலும் சில மாநிலங்களில் மார்ச் மாதத்திலேயே கொள்முதல் ஆரம்பமாகி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஜூன் மாதத்திற்குள் நிர்ணயித்த கொள்முதல் இலக்கு எட்டப்பட்டு விடுகிறது.

இந்திய உணவுக்கழகமும், மாநில அரசு முகமைகளும் நெல், கோதுமையை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அன்று புதிய சந்தைப் பருவம் தொடங்கிய நிலையில், இந்தப் பருவத்தில் இந்திய உணவுக்கழகம் மட்டும் 1.30 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த 2017-18 பருவத்தில் மத்திய, மாநில அரசு முகமைகளின் ஒட்டுமொத்த கொள்முதல் இலக்கு 3.20 கோடி டன்னாக இருந்தது. எனினும் அந்த இலக்கைத் தாண்டி கொள்முதல் அதிகரித்தது. நடப்பு பருவத்தில் 3.57 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், இப்பருவத்தில் இதுவரை மத்திய, மாநில அரசு முகமைகள் 55.17 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளன.

நடப்பு சந்தை பருவத்தில் (2018 ஏப்ரல்-2019 மார்ச்) கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முதலில் குவிண்டாலுக்கு ரூ.1,735-ஆக நிர்ணயிக்கப்பட்டது. அது போதாது என விவசாயிகள் தெரிவித்ததால் பின்னர் விலை ரூ.1,840-ஆக உயர்த்தப்பட்டது.

இறக்குமதி வரி

கோதுமை விளைச்சல் அமோகமாக இருப்பதால் (சுமார் 10 கோடி டன்), மலிவு விலை இறக்குமதியில் இருந்து விவசாயிகளைக் காக்கும் வகையில் மத்திய அரசு கோதுமை மீதான இறக்குமதி வரியை (30 சதவீதத்தில் இருந்து) 40 சதவீதமாக உயர்த்தி இருந்தது.


Next Story