நடப்பு பருவத்தின் முதல் 7 மாதங்களில்


நடப்பு பருவத்தின் முதல் 7 மாதங்களில்
x
தினத்தந்தி 5 May 2019 8:11 AM GMT (Updated: 5 May 2019 8:11 AM GMT)

நடப்பு பருவத்தின் முதல் 7 மாதங்களில் 3.21 கோடி டன் சர்க்கரை உற்பத்தி

புதுடெல்லி

நடப்பு 2018-19 பருவத்தின் (அக்டோபர்-செப்டம்பர்) முதல் 7 மாதங்களில் 3.21 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி இருக்கிறது. இது புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது.

இரண்டாவது இடம்

சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. நம் நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. சர்க்கரை உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது.

2013-14 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 2.83 கோடி டன்னாக இருந்தது. 2015-16 பருவத்தில் அது 2.51 கோடி டன்னாக குறைந்தது. 2016-17 பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிந்தது. ஆனால் கடந்த 2017-18 பருவத்தில், அதுவரை இல்லாத அளவிற்கு 3.25 கோடி டன்னாக அதிகரித்தது.

இந்நிலையில், நடப்பு சந்தை பருவத்தில் ஏப்ரல் வரையிலான முதல் 7 மாதங்களில் நாட்டில் மொத்தம் 3.21 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவாகும். இதில் உத்தரபிரதேசத்தில் உற்பத்தி அதிகபட்சமாக 1.13 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது. அடுத்து மகாராஷ்டிராவில் 1.07 கோடி டன் உற்பத்தி ஆகி உள்ளது. கர்நாடகாவில் உற்பத்தி 43 லட்சம் டன்னாக இருக்கிறது.

கடந்த 2017-18 பருவத்தின் அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஏற்றுமதி சர்க்கரைக்கு முன்பு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் இறக்குமதி வரி 50 சதவீதமாக இருந்தது.

3.30 கோடி டன்

நடப்பு 2018-19 பருவத்தில் இந்திய சர்க்கரை ஆலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 3.30 கோடி டன்னாக அதிகரிக்கும் என இஸ்மா மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த பருவத்தின் உற்பத்தியை விட 5 லட்சம் டன் அதிகமாகும். அடுத்த பருவத்தில் (2019 அக்டோபர்-2020 செப்டம்பர்) உற்பத்தி 2.80 கோடி டன் முதல் 2.90 கோடி டன் வரை இருக்கும் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நடப்பு பருவத்தில் இந்திய ஆலைகள் 50 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆலைகள் 30-35 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story