ரெயில்டெல் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு முடிவு


ரெயில்டெல் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM GMT (Updated: 14 May 2019 3:45 AM GMT)

செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில்டெல் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு முடிவு

புதுடெல்லி

செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒப்புதல்

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரெயில்வே துறையைச் சேர்ந்த இர்கான் இண்டர்நேஷனல், ரைட்ஸ், ஆர்.வி.என்.எல்., ஐ.ஆர்.எப்.சி. மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆகிய 5 நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இன்றைய நிலையில் ரைட்ஸ், இர்கான் இண்டர்நேஷனல் மற்றும் ரெயில் விகாஸ் நிகாம் (ஆர்.வி.என்.எல்) ஆகிய 3 ரெயில்வே நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ரெயில்வே துறையில் மூன்றாவதாக பங்கு வெளியிட்ட ஆர்.வி.என்.எல். நிறுவனத்தின் புதிய பங்குகள் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இந்தப் பங்கின் விலை 0.26 சதவீதம் மட்டும் ஏற்றம் கண்டு ரூ.19.05-ல் நிலைகொண்டது.

இதன் தொடர்ச்சியாக மேலும் சில ரெயில்வே நிறுவனங்களின் புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் இந்தியன் ரெயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எப்.சி) மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆகிய நிறுவனங்கள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி.யின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.1,000 கோடி திரட்டப்பட உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் மத்திய அரசு ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்து இருக்கிறது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில்டெல் கார்ப்பரேஷனின் 25 சதவீத பங்குகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மினிரத்னா அந்தஸ்து பெற்ற ரெயில்டெல் நிறுவனம் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு வசதிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம் இருப்புப் பாதைகள் அருகே கண்ணாடி இழை கட்டமைப்புகளை நிர்வகிக்கிறது. பொருளாதார விவகாரங் களுக் கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் அளித்தது. நிதிப்பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு கையாளும் முக்கிய வழிமுறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் ஒன்றாகும். நடப்பு நிதி ஆண்டில் (2019-20) அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான முதல் இலக்கை விட (ரூ.80,000 கோடி) இது 12.5 சதவீதம் அதிகமாகும்.


Next Story