பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு


பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
x
தினத்தந்தி 16 May 2019 4:22 AM GMT (Updated: 16 May 2019 4:22 AM GMT)

ஏப்ரல் மாதத்தில், நிகர அடிப்படையில் பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

புதுடெல்லி

ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் பல்வேறு முதலீட்டு திட்டங்களில், நிகர அடிப்படையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு இறங்குகிறது.

4 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இது ரூ.24.78 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்துறையின் முதலீட்டுத் திட்டங்களில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். மார்ச் மாதத்தில் இந்த திட்டங்களில் இருந்து ரூ.22,357 கோடி வெளியேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர துறையின் வருவாய் மற்றும் கடன் சந்தை திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. நிகர முதலீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியதன் பின்னணி இதுவே.

ஏப்ரலில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு 61 சதவீதம் குறைந்து ரூ.4,609 கோடியாக உள்ளது. பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கம் காரணமாக இந்தத் திட்டங்களில் முதலீடு சரிவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்த திட்டங்கள் ரூ.11,756 கோடி முதலீட்டை ஈர்த்து இருந்தன.

பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்கள் ரூ.8,238 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. இது ஒரு புதிய சாதனை அளவு என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக இப்பிரிவில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதே இதற்குக் காரணமாகும்.

15 பெரிய நகரங்கள்

புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பன்ஜிம், பூனா மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் 15 பெரிய நகரங்களாகும்.

இந்தப் பெருநகரங்களை தவிர்த்து மற்ற நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பலனாக பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

2025-ஆம் ஆண்டுக்குள் பரஸ்பர நிதித்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது. அப்போது இத்துறையின் சொத்து மதிப்பு ரூ.94 லட்சம் கோடியாக இருக்கும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.


Next Story