புண்ணாக்கு ஏற்றுமதி 25% சரிவு


புண்ணாக்கு ஏற்றுமதி 25% சரிவு
x
தினத்தந்தி 16 May 2019 4:39 AM GMT (Updated: 16 May 2019 4:39 AM GMT)

கடந்த ஏப்ரல் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 25 சதவீதம்

மும்பை

கடந்த ஏப்ரல் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 25 சதவீதம் சரிவடைந்து 1.69 லட்சம் டன்னாக உள்ளது.

எள், கடுகு

எள், கடுகு, பருத்தி விதை, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) ரூ.6,222 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.4,762 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் அளவு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 6 சதவீதம் உயர்ந்து 32 லட்சம் டன்னாக இருக்கிறது. தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்ததே இதற்கு காரணமாகும்.

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் 2.64 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 1.69 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2.24 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்து இருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி 94,847 டன்னாக உள்ளது. வியட்நாமிற்கான ஏற்றுமதி (43,368 டன்னில் இருந்து) 17,575 டன்னாக குறைந்து இருக்கிறது. தாய்லாந்திற்கான சோயா புண்ணாக்கு ஏற்றுமதி (19,224 டன்னில் இருந்து) 32,337 டன்னாக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் புண்ணாக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.

சோயாபீன்

உலக அளவில், சோயாபீன் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது. ஆசியாவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில் சோயாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் மத்தியபிரதேசம் முன்னணியில் உள்ளது.


Next Story