பரஸ்பர நிதி துறையில், முதலீட்டாளர் கணக்குகள் 2.80 லட்சம் அதிகரிப்பு


பரஸ்பர நிதி துறையில், முதலீட்டாளர் கணக்குகள் 2.80 லட்சம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 May 2019 1:36 AM GMT (Updated: 18 May 2019 1:36 AM GMT)

ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர நிதி துறையில், முதலீட்டாளர் கணக்குகள் 2.80 லட்சம் அதிகரிப்பு

புதுடெல்லி

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 லட்சம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது...

ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 2.80 லட்சம் அதிகரித்து இருக்கிறது.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற் படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு இறங்குகிறது.

ரூ.1 லட்சம் கோடி முதலீடு

கடந்த மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இது ரூ.24.78 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.

ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர துறையின் வருவாய் மற்றும் கடன் சந்தை திட்டங்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு 61 சதவீதம் குறைந்து ரூ.4,609 கோடியாக உள்ளது. சீரான முதலீட்டுத் திட்டங்கள் ரூ.8,238 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன.

முதலீட்டாளர் கணக்குகள்

2015-16-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 59 லட்சம் உயர்ந்தது. 2016-17-ஆம் ஆண்டில் 67 லட்சம் அதிகரித்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் இத்துறையின் அனைத்து திட்டங்களிலும் ஒட்டுமொத்த அளவில் 1.6 கோடி புதிய முதலீட்டாளர் கணக்குகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 7.13 கோடியை தாண்டி இருந்தது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 லட்சம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது.

புதிய கணக்குகள்

இந்நிலையில், நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் இத்துறையில் 2.80 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 8.27 கோடியை எட்டி இருக்கிறது. முதல் மாதத்திலேயே சுமார் 3 லட்சம் புதிய கணக்குகள் உருவாகி இருப்பது இத்துறையினருக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

சிறிய, நடுத்தர நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பலனாக பரஸ்பர நிதி துறையில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய பங்கு வெளியீடுகள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.


Next Story