சென்செக்ஸ் 537 புள்ளிகள் உயர்வு நிப்டி 150 புள்ளிகள் முன்னேற்றம்

வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 537 புள்ளிகள் உயர்வு நிப்டி 150 புள்ளிகள் முன்னேற்றம்
மும்பை
வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 537 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 150 புள்ளிகள் முன்னேறியது.
தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை நோக்கி நாடே காத்திருக்கிறது. இறுதிக் கட்ட தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் அன்று இரவு முதல் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் ஊக்கமளிப்பதாக இருந்தது. எனவே ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை சந்தைகள் பொருட்படுத்தவில்லை.
அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அதில் மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.45 சதவீதம் ஏற்றம் கண்டது. அடுத்து நுகர்பொருள் துறை குறியீட்டு எண் 2.31 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, கோட்டக் மகிந்திரா வங்கி, பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்தான் யூனிலீவர், எச்.டீ.எப்.சி. உள்ளிட்ட 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் வேதாந்தா, இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், சன் பார்மா, டி.சி.எஸ்., என்.டி.பி.சி. உள்பட 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் அதிகரித்து 37,930.77 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,001.13 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,415.36 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 1,403 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,113 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 146 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,440 கோடியாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.2,216 கோடியாக இருந்தது.
தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,426.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,259.85 புள்ளிகளுக்கும் சென்றது.
Related Tags :
Next Story






