கோதுமை கொள்முதல், நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அதிகரிக்க வாய்ப்பு


கோதுமை கொள்முதல், நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அதிகரிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 22 May 2019 4:39 AM GMT (Updated: 22 May 2019 4:39 AM GMT)

நடப்பு சந்தை பருவத்தில் கோதுமை கொள்முதல், நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அதிகரிக்க வாய்ப்பு

நடப்பு 2019-20 சந்தை பருவத்தில் (ஏப்ரல்-மார்ச்) நிர்ணயித்த இலக்கைத் தாண்டி கோதுமை கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இரண்டு பருவங்கள்

நம் நாட்டில் கரீப், ரபி ஆகிய இரண்டு பருவங்களில் சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடைகிறது. அக்டோபர்-மார்ச் மாத காலம் ரபி பருவமாகும். இந்தப் பருவத்தில் கோதுமையே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த வேளாண் பருவத்தில் (2017 ஜூலை-2018 ஜூன்) 9.71 கோடி டன் கோதுமை உற்பத்தியாகி இருந்தது. நடப்பு 2018-19 பருவத்தில் கோதுமை விளைச்சல் 9.91 கோடி டன்னைத் தாண்டி உள்ளதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கோதுமை கொள்முதல் பருவம் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. என்றாலும் சில மாநிலங்களில் மார்ச் மாதத்திலேயே கொள்முதல் ஆரம்பமாகி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஜூன் மாதத்திற்குள் நிர்ணயித்த கொள்முதல் இலக்கு எட்டப்பட்டு விடுகிறது.

இந்திய உணவுக்கழகமும், மாநில அரசுகளின் முகமைகளும் நெல், கோதுமையை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுகிறது. நடப்பு சந்தை பருவத்தில் (2019 ஏப்ரல்-2020 மார்ச்) கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,840-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அன்று புதிய சந்தைப் பருவம் தொடங்கியது. இப்பருவத்தில் இந்திய உணவுக்கழகம் மட்டும் 1.30 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கொள்முதல் இலக்கு

கடந்த 2018-19 பருவத்தில் மத்திய, மாநில அரசு முகமைகளின் ஒட்டுமொத்த கொள்முதல் இலக்கு 3.20 கோடி டன்னாக இருந்தது. எனினும் அந்த இலக்கைத் தாண்டி 3.55 கோடி டன்னாக கொள்முதல் அதிகரித்தது. நடப்பு பருவத்தில் 3.57 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இப்பருவத்தில், மே 10 நிலவரப்படி, மத்திய, மாநில அரசு முகமைகள் 2.93 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளன.

இந்நிலையில், ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கோதுமை கொள்முதல் நிர்ணயித்த 3.57 கோடி டன் இலக்கைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story