நாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாட திட்டம் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் ஆரம்ப கல்விக்கு முன்பு 3 வருட கல்வி பரிந்துரை


நாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாட திட்டம் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் ஆரம்ப கல்விக்கு முன்பு 3 வருட கல்வி பரிந்துரை
x
தினத்தந்தி 12 Jun 2019 7:18 AM GMT (Updated: 12 Jun 2019 7:18 AM GMT)

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி பருவத்தை பற்றி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியுள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி பருவத்தை பற்றி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிறப்பு முதல் ஆறு வயது வரையிலான பருவத்தை பற்றி கவனப்படுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் கற்கத் தொடங்குவதாக நரம்பியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆறு வயதிற்குள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 85 சதவீததை எட்டிவிடும் என்பதால், இந்த பருவத்தில், குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.

எனவே ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை (இ.சி.சி.இ), பள்ளிக் கல்விக்கான ஆதாரமாக இந்த அறிக்கை முன்வைக்கிறது. இதற்கு, ஆரம்பக் கல்விக்கு முன்பாக, மூன்று வருட கல்வியை பரிந்துரைக்கிறது. 3 முதல் 8 வயது வரை ‘விளையாட்டு மூலம் கண்டறிந்து கற்றல்’ முறையின் அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை முன்மொழிகிறது. ஆரம்ப வயதுகளில் சரியாக பேணப்படாததால் பின் தங்கும் குழந்தைகள், கடைசி வரை, கல்வியில் பின்தங்குகிறார்கள் என்று மாணவர்களின் கற்றல் திறன் பற்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இந்தியாவில் கல்வி கற்றலில் ஒரு நெருக்கடி உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை கணித திறன் மற்றும் கற்றல் திறன் இல்லை. முதல் வகுப்பில் நுழைவதற்கு முன்பே இந்த பிரச்சினை உருவாகிறது. ஆறு வயதில், முதல் வகுப்பில் சேருவதற்கு முன்பு போதுமான கவனிப்பும், அடிப்படை கல்வியும் கிடைக்காததால், இது ஏற்படுகிறது. ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை கல்வி கற்க வாய்ப்பு கிடைக்காத பல சிறார்கள், ஆறு வயதாகும் முன்பே ஒன்றாம் வகுப்பில் சேருவதும் அதிகம் நடக்கிறது.

இந்த குறைபாடு, சமூகத்தில் பெரும் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான முன் கல்வியும், ஆரோக்கியமான குடும்ப சூழலும், ஊட்டசத்து மிகுந்த உணவுகளும், மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.

இந்த மாற்றம் எப்படி நடக்கும்?

உயர்தரமான பராமரிப்பு, சீரான உணவு, சரியான விளையாட்டுகள், மகிழ்ச்சியான குடும்பச் சூழல், மன ரீதியான ஆதரவு ஆகியவை ஒரு குழந்தையின் முதல் ஆறு வருடங்களுக்கு மிக முக்கியமானவை என்று இந்த வரைவு அறிக்கை கருதுகிறது. இதன் மூலம் மூளை வளர்ச்சி சீராக நடந்து, கற்றல் திறன் தேவையான அளவுக்கு வளரும்.

சிறு வயதில் பல வகையான புறக்கணிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மூளை ஸ்கேன்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில், இந்த கருத்துகளை வரைவு அறிக்கை முன்வைக்கிறது. இவர்களின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் உருவாகி, அதனால் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

சிறந்த இ.சி.சி.இ திட்டத்தை செயல்படுத்த அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், பத்து ரூபாய் அளவுக்கு பலன் கிடைக்கும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது.

இ.சி.சி.இ எப்படி வேலை செய்கிறது?

பிறந்தது முதல் மூன்று வயது வரை தாயாருக்கும், குழந்தைக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை பேண, தொடர்ந்து அவர்களுடன் பேசுதல், விளையாடுதல், நகர்த்துதல், இசை கேட்க வைத்தல், தொடுதல் போன்றவறை செய்ய வேண்டும். பல மொழிகளின் மற்றும் எண்களை அறிமுகம் செய்து, எளிய புதிர்களுக்கு விடை தேட பழக்குதல் ஆகியவையும் இந்த வயதுகளில் மிகவும் தேவையானவை ஆகும். 3 முதல் 6 வயது வரையிலான இரண்டாவது கட்டத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். சுயஉதவி திறன்கள், சுகாதாரம், நகரும் திறன்கள், பிரிவு, பதற்றம் போன்ற உணர்ச்சிகளை கையாளுதல், சக வயதுடைய குழந்தைகளுடன் சகஜமாக பழகுதல், சரி, தவறுகள் பற்றிய தார்மீக அறிவு, உடற்பயிற்சி ஆகியவை இதில் கற்பிக்கப்படும்.

எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பெற்றவர்களிடமும், பிறரிடமும் வெளிப்படுத்த, பிறருடன் தொடர்பு கொள்ள, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு செயலை செய்ய, பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும். கூட்டு முயற்சி, குழுவாக செயல்படுதல், சமூக ஊடாடல்கள், கருணை காட்டுதல், சமமாக நடத்துதல், சேர்த்துக்கொள்ளுதல், கலாசாரத்தை மதித்தல், ஆர்வம் காட்டல், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் சகஜமாகவும், மரியாதையுடனும் பழகுதல் ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.

பல துறை திறன்களை வளர்க்கும் நோக்கத்தை கொண்ட இ.சி.சி.இ திட்டத்தில் எழுத்துகள், மொழிகள், எண்ணுதல், வரைதல், வண்ணங்கள், வடிவங்கள், வண்ணம் பூசுதல், உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்,

புதிர்கள், தர்க்கரீதியாக சிந்தித்தல், காட்சிக் கலை, கைவினை, பொம்மலாட்டம், இசை, நடனம் ஆகியவை அடங்கும்.

ஆரம்பக்கட்ட குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி: 
நன்னடத்தை மற்றும் ஒழுங்கான வளர்ப்புக்கான அடிப்படை

இ.சி.சி.இ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

*  போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இல்லாத அங்கன்வாடிகள் மேம் படுத்தப்பட வேண்டும்.

* அங்கன்வாடி மையங்களுக்காக கோரிக்கைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகத்திடம் இருந்து எழும்ப வேண்டும்.

*  அங்கன்வாடிகள், முதல்நிலை பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டும்; இவை ஆரம்பப் பள்ளிகளுக்குள் நிறுவப்பட வேண்டும்; அல்லது தனியாக இயங்கும் முதல் நிலை பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

*  புதிய கல்வி கொள்கையின் அடிப்படையிலான பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இவற்றில் பணியமர்த்தப்பட வேண்டும்.

*  இவர்கள் கலாசார பாரம்பரியங்கள், நாட்டுப்புற கலைகள், கவிதைகள், கதைகள், பாடல்கள், சமூகத்துடன் அடையாள உணர்வு, உற்சாக உணர்வு ஆகியவற்றை கற்பிப்பார்கள்.

நிர்வாக கட்டமைப்பு: 

* முதல்நிலை பள்ளிகள் முதல் ஆரம்பப் பள்ளிகள் வரை கல்வி கற்றலில் தொடர்ச்சியை உறுதி செய்ய, இ.சி.சி.இ திட்டத்தை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் செயல்படுத்தும். அடிப்படை கல்வி பற்றி நாடு தழுவிய கவன குவிப்பை இது உறுதி செய்யும். 

* ஆரம்ப நிலை குழந்தை பருவ கல்வியை, கல்வி பெறும் உரிமை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

* இ.சி.சி.இ திட்டத்தின் தரத்தை  உறுதி செய்ய ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.

* ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் முதல் நிலை பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் தரம் உறுதி செய்யப்படும்.

* ஆரம்ப கால குழந்தை பருவ கல்விக்கான கோரிக்கைகள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படும். 

இரண்டு கட்ட பாடத்திட்ட கொள்கை 

புதிய கல்வி கொள்கையின்படி இரண்டு கட்ட பாடத்திட்டத்தை உருவாக்கும் பணி என்.சி.இ.ஆர்.டி அமைப்பிற்கு அளிக்கப்படும்

முதல் பகுதி: 0 முதல் 3 வயதுடைய குழந்தைகளுக்கான பாடத்திட்டம். பெற்றோர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் குழந்தைகளின் புரிதல் திறனை மேம்படுத்த உதவுவார்கள். எளிமையான, மலிவான கலவி சாதனங்கள் உருவாக்குவதன் மூலம் இதை செய்ய முடியும். 

உதாரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் வண்ணமயமான மிட்டாய்களை கொண்டு செய்யப்பட்ட குழந்தைகளுக்கான கிலுகிலுப்பைகள், குச்சிகளை கொண்டு அடிக்கப்படும் எளிய தாள வாத்தியங்கள், செய்தித்தாள்களை மடித்து செய்யப்பட்ட தொப்பிகள், படகுகள் போன்றவை. அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கான கைவினை பயிற்சிகளாக இவை இருக்கும். பெற்றோர்களிடமும் இவை அளிக்கப்படும்.

இரண்டாம் பகுதி: 3 முதல் 8 வயதுடைய குழந்தைகளுக்கானது அங்கன்வாடிகள், முதல் நிலைப்பள்ளிகள், பெற்றோர்கள், ஆரம்பப் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கானது.

பல அடுக்குகள் கொண்ட, நெகிழ்வான, விளையாட்டு மற்றும் செயல்களை அடிப்படையாக கொண்ட கல்வி முறை. எழுத்துகள், எண்கள், தாய் மொழி அல்லது வட்டார மொழிகளில் தொடர்பு கொள்ளும் திறன், வண்ணங்கள், வடிவங்கள், ஒலிகள், நகர்தல், விளையாட்டுகள், வரைதல், ஓவியம், இசை, உள்ளூர் கலைகள், ஆர்வத்தை ஏற்படுத்துதல், பொறுமை, குழுவாக செயல்படுதல், கூட்டு முயற்சி, பச்சாதாபம் காட்டுதல் போன்ற சமூக உணர்ச்சி திறன்களை கற்பித்தல்.

* சீரான முறையில் இத்திட்டத்தை செயல்படுத்த, ஆரம்பகட்ட குழந்தை பருவ கல்வியை, பள்ளிக்கல்வி முறையுடன் ஒருங்கிணைக்க புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை சொல்கிறது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகத்துடனும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடனும் கலந்தாலோசனை செய்து இது செயல்படுத்தப்படும்.

2019–ம் ஆண்டின் இறுதியில், மூன்று மத்திய அமைச்சகங்களின் கூட்டு குழுவினால் இத்திட்டம் இறுதி செய்யப்படும்.

Next Story