ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற மாமல்லபுரம்


ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற மாமல்லபுரம்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:20 AM GMT (Updated: 12 Jun 2019 11:20 AM GMT)

சென்னைக்கு சுற்றுலா வரும் பிற மாவட்டத்தினர் மாமல்லபுரம் சென்று தங்கி அங்கு பல அரிய விஷயங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் வார இறுதி நாட்கள் மற்றும் ஒரு நாள் சுற்றுலா செல்லும் இடங்களைத் தேர்வு செய்வது சரியாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் இருப்பவர்கள் அருகிலுள்ள மாமல்லபுரத்துக்கு சென்று வரலாம். 

பொதுவாக கோடைகாலங்களில் இங்கும் வெயில் தகிக்கும். காரணம் சுற்றியும் பாறைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். இதனால் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையான காலங்களில் இங்கு செல்வதே சிறந்தது. எனவே காலாண்டு விடுமுறைக்கு திட்டமிடுங்கள். சென்னை வாசிகள் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்பிவிடலாம். குழந்தைகளுடன் சென்றால் பல்வேறு வரலாற்று விஷயங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் இது வாய்ப்பாக இருக்கும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. 7-ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். மகாபலிபுரம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

சென்னைக்கு தெற்கே 62 கி.மீ. தொலைவிலும் காஞ்சிபுரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ளது. பல்லவர் கால வரலாற்றைப் போற்றும் வகையில் சிற்பக் கலை மிகுந்த பகுதிகள் இங்குள்ளன. குடைவரைக் கோவில்கள், மண்டபங்கள், ஒற்றைக்கல் கோவில்கள், ரதங்கள், கட்டுமானக் கோவில்கள் இங்குள்ளன.

இவை தவிர புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும், கோவில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன. சிற்பக் கலைக்காகவே யுனெஸ்கோ அமைப்பு இதை உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இங்குள்ள கடற்கரை கோவில் 7-ம் நூற்றாண்டிலேயே கிரானைட்டால் கட்டப்பட்டது. பல்லவ மன்னர்களின் சிற்பக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.

யுனெஸ்கோ அமைப்பால் உலகின் பாரம்பரியம் மிக்க இடங்களுள் ஒன்றாக இது போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இங்கு நடன விழா நடைபெறும்.

அர்ஜுனன் தபஸ் கோலத்தில் உள்ள சிற்பம் பல்லவர் கால சிற்பக் கலையின் நயத்தை வெளிப்படுத்தும். இங்குள்ள பஞ்ச ரதங்கள் ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டவை. இங்குள்ள மலைப் பகுதியில் கண்ணனின் வெண்ணெய் எனக் கூறப்படும் ‘பட்டர் பால்’ மலைப்பகுதியில் வெகு நேர்த்தியாக இருக்கும். இதை நகர்த்த 7 யானைகளைக் கொண்டு பல்லவ மன்னன் முயன்றும் அது முடியாமல் போனது. செல்பி பிரியர்கள் இந்த பட்டர் பால் அருகே புகைப்படம் எடுத்தும் மகிழலாம்.

Next Story