மே மாதத்தில், அளவு அடிப்படையில் பாமாயில் இறக்குமதி 56 சதவீதம் உயர்ந்தது
மே மாதத்தில், அளவு அடிப்படையில் பாமாயில் இறக்குமதி 56 சதவீதம் உயர்ந்து 3.71 லட்சம் டன்னாக உள்ளது.
எண்ணெய் பருவம்
நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் எண்ணெய் பருவம் ஆகும். கடந்த எண்ணெய் பருவத்தில் (2017-18) பாமாயில் இறக்குமதி 96 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, நடப்பு பருவத்தில் இறக்குமதி 10.3 சதவீதம் அதிகரிக்கும் என்று தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறி உள்ளது.
பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறிய அளவில் சோயா எண்ணெய் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 86 சதவீதமாக இருந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் அது 62 சதவீதமாக குறைந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 56 சதவீதமாக குறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மே மாதத்தில் 3.71 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 56 சதவீதம் உயர்வாகும். அப்போது இறக்குமதி 2.38 லட்சம் டன்னாக இருந்தது.
உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால் எண்ணெய் உற்பத்தியும் குறைவாக உள்ளது. எனவே தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமையல் எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.
1.50 கோடி டன்
நம் நாட்டில் ஆண்டுக்கு ஏறக்குறைய 1.50 கோடி டன் அளவிற்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story