நிதி ஆண்டின் முதல் 2 மாதங்களில் 12 பெரிய துறைமுகங்களில் நிலக்கரி இறக்குமதி 1% உயர்வு


நிதி ஆண்டின் முதல் 2 மாதங்களில் 12 பெரிய துறைமுகங்களில் நிலக்கரி இறக்குமதி 1% உயர்வு
x
தினத்தந்தி 9 July 2019 8:02 AM GMT (Updated: 9 July 2019 8:02 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நடப்பு 2019-20-நிதி ஆண்டின் முதல் 2 மாதங்களில் (ஏப்ரல், மே), 12 பெரிய துறைமுகங்களில், நிலக்கரி இறக்குமதி 1 சதவீதம் உயர்ந்து 1.95 கோடி டன்னாக இருக்கிறது.

கண்ட்லா, மும்பை

நம் நாட்டில் நீண்ட கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும், ஏறக்குறைய 200 சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. இதில் கண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மர்ம கோவா, புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 முக்கிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

2017-18-ஆம் நிதி ஆண்டில் 12 பெரிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள் 4.77 சதவீதம் உயர்ந்து 67.94 கோடி டன்னாக இருந்தது. இது வாகும். கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்த துறைமுகங்கள் மொத்தம் 69.90 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 2.90 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி, உரம், பெட்ரோலிய பொருள்கள் மற்றும் கண்டெய்னர்கள் அதிக அளவில் கையாளப்பட்டதே இதன் பின்னணியாக இருக்கிறது.

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19), 12 பெரிய துறைமுகங்களில் 16 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது 15 கோடி டன்னாக இருந்தது. ஆக, 12 பெரிய துறைமுகங்களின் நிலக்கரி இறக்குமதி 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல்-மே மாத காலத்தில் 12 துறைமுகங்களில் நிலக்கரி இறக்குமதி 1.95 கோடி டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 1 சதவீத உயர்வாகும். இதில் 99 லட்சம் டன் உயர்தர நிலக்கரி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 15.40 சதவீதம் அதிகமாகும். கொல்கத்தா துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

61 சதவீத பங்கு

நாட்டின் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் 12 பெரிய துறைமுகங்கள் 61 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. இந்த துறைமுகங்களில் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Next Story