எதிர்வரும் 2019-20 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 18 சதவீதம் சரிந்து 2.70 கோடி டன்னாக குறையும் : மேற்கு இந்திய ஆலைகள் சங்கம் மதிப்பீடு


எதிர்வரும் 2019-20 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 18 சதவீதம் சரிந்து 2.70 கோடி டன்னாக குறையும் : மேற்கு இந்திய ஆலைகள் சங்கம் மதிப்பீடு
x
தினத்தந்தி 11 July 2019 8:53 AM GMT (Updated: 11 July 2019 8:53 AM GMT)

எதிர்வரும் 2019-20 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 18 சதவீதம் சரிந்து 2.70 கோடி டன்னாக குறையும் என மேற்கு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (விஸ்மா) மதிப்பீடு செய்து இருக்கிறது.

இந்தியா 2-வது இடம்

சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. நம் நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நமது மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.

நம் நாட்டில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சர்க்கரை பருவமாகும். நடப்பு 2018-19 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.30 கோடி டன்னாக அதிகரிக்கும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த பருவத்தின் உற்பத்தியை விட 5 லட்சம் டன் அதிகமாகும். ஆனால் உற்பத்தி 2.80 கோடி டன் முதல் 2.90 கோடி டன் வரைதான் இருக்கும் என்று சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது 3 ஆண்டுகளில் இல்லாத சரிவாக இருக்கும்.

இந்நிலையில், அடுத்த பருவத்தில் (2019 அக்டோபர்- 2020 செப்டம்பர்) 2.70 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகும் என்று மேற்கு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது நடப்பு பருவத்தின் உற்பத்தியை (3.30 கோடி டன்) காட்டிலும் 18 சதவீதம் குறைவாக இருக்கும் என இச்சங்கம் தெரிவித்து இருக்கிறது.

அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதே சமயம் இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி முன்பு 50 சதவீதமாக இருந்தது.

கரும்பு விவசாயிகள்

கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.18,958 கோடி பாக்கி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

Next Story