பொதுத்துறை வங்கிகளின் சாதனைகள், சவால்கள்...!


பொதுத்துறை வங்கிகளின் சாதனைகள், சவால்கள்...!
x
தினத்தந்தி 19 July 2019 6:23 AM GMT (Updated: 19 July 2019 6:23 AM GMT)

ஜூலை 19 என்கிற நாள் வங்கித்துறையில், பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள்.

ன்று (ஜூலை 19-ந் தேதி) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம்.

ஜூலை 19 என்கிற நாள் வங்கித்துறையில், பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள். இதே நாளில்தான், 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1969, ஜூலை 19-ம் நாள் 14 தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த நாட்களில் வங்கிகள் பணம் படைத்தவர்களின் உடைமைகளாக இருந்தது. பணக்காரர்களுக்கு சேவை செய்வதற்கென்றே படைக்கப்பட்டவைகளைப் போல பணியாற்றிக் கொண்டிருந்தன. மக்களின் சேமிப்பு அந்த மக்களுக்காக, சமூகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படாமல், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதற்கு பயன்படுத்தப்பட்டன. அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் சில வங்கிகள் திவாலாகிக் கொண்டிருந்தன. அவ்வங்கிகளில் தங்களது சேமிப்பை வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை இழந்து நிர்க்கதியாக நின்றார்கள்.

சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளுக்கு கடன் வழங்குவதை தவிர்த்து தங்களது லாபத்தை கூட்டுவதற்கான முயற்சியில் மட்டுமே தனியார் வங்கிகள் கவனம் செலுத்துவதை அடையாளம் கண்டனர். சிலரிடம் மட்டுமே செல்வ வளக்குவியல் நடைபெறும் வேலையை தனியார் வங்கிகள் துரிதப்படுத்திக் கொண்டிருந்தன. எனவேதான், அன்னியச் செலாவணியில் நடைபெறும் ஊழலைத்தடுக்கவும், வேளாண்மையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை பெருக்கும் தொழிலை வளர்த்தெடுக்கவும், செல்வ வளங்கள் சிலரிடம் மட்டுமே குவிவதைத் தடுக்கவும், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வைத்து முன்னணியில் நின்று போராடியது.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, இச்சூழ்நிலையை அரசியல், பொருளாதார பின்னணியில் நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், ஏன் வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டுமென்ற விவரங்களை உள்ளடக்கிய ‘வங்கிகள் தேசிய மயம் சில சிந்தனைச் சிதறல்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் சமர்ப்பித்தார். அக்கட்டுரை பெருவாரியான உறுப்பினர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. 1969 ஜூலை 19-ந் தேதி இந்திய அரசாங்கம் 14 பெரும் தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இரண்டு வாரங்களுக்குள்ளாக அந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு ஆகஸ்டு 9, 1969 அன்று ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.

அதுவரை மந்தகதியில், கார்ப்பரேட்டுகளுக்காக, பெருமுதலாளிகளுக்காக நகரங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த வங்கித்துறை தேசியமயத்திற்கு பின்னால் அசுர வேகத்தில் பயணித்தது. கிராமப் பகுதிகளுக்கு வங்கிச் சேவைகள் கொண்டு சேர்க்கப்பட்டன. அதுநாள் வரை அலட்சியப்படுத்தப்பட்ட வேளாண்மை முதலான, வேலை வாய்ப்பை பெருக்குகின்ற தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. சுமார் 8 ஆயிரம் கிளைகளோடு இருந்த வங்கித்துறை சுமார் 80 ஆயிரம் வங்கி கிளைகளாக அதிகரித்தது. பொதுத்துறை வங்கிகள் உதவாத துறை ஏதுமில்லை என்கிற அளவில் பல்வேறு துறைகளும் பயனடைந்தன. திவாலாகிவிடுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் தங்கள் சேமிப்பை வைத்திருந்த நிலை மாறி, பாதுகாப்பானது பொதுத்துறை என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இன்று வங்கிகளின் வைப்புத்தொகை ரூ.128 லட்சம் கோடிகளை எட்டியுள்ளது. அதே போல நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கென வங்கிகள் வழங்கியிருக்கின்ற கடன் ரூ.95 லட்சம் கோடிகளாக உள்ளது. ஆனால், இன்று பொதுத்துறை வங்கிகளின் பொன்விழாவைக் கொண்டாடுகிற நேரத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

1991-ல் புதிய பொருளாதார கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் படலம் ஆரம்பமானது. பொதுத்துறை வங்கிகளும் அதே பாதையில் செலுத்தப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற குரல்கள் திட்டமிட்டு தனியார் கார்ப்பரேட்டுகளால் எழுப்பப்பட்ட வண்ணம் உள்ளது.

இன்றையதினம் வங்கிகளுக்கு முன்னால் உள்ள பெரும் பிரச்சினை என்னவெனில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற வாராக்கடன்கள். வங்கிகள் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிலும் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பக் கட்டப்படாமல் வருடந்தோறும் வாராக்கடன்களின் அளவை அச்சுறுத்தும் அளவிற்கு ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசே ஒப்புக்கொண்ட வண்ணம், 9,063 கார்ப்பரேட் கடன்காரர்கள் வசதி இருந்தும், கட்ட முடிந்தும், திருப்பிக்கட்டாத கடன்தொகையின் அளவு ரூ.1,10,050 கோடிகள். இத்தொகை வேண்டுமென்றே கட்டப்படாத தொகை. ஆனால் அவற்றை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் அரசு புதிய சட்டம் மூலம் அவர்கள் தப்பித்து செல்ல வழிவகை செய்திருக்கிறார்கள்.

அதன் காரணமாக, 31-3-2018 அன்று முடிந்த நிதி ஆண்டில், பொதுத்துறை வங்கிகள் ரூ.1,50,149 கோடிகளை மொத்த லாபமாக அடைந்தபோதிலும் ரூ.85,370 கோடி நட்டக்கணக்கு காட்டவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வாராக்கடன்களுக்காக ரூ.2,83,672 கோடிகளை ஒதுக்கி நிகர நட்டம் காட்டவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவ தயாராக உள்ள வங்கிகள் அவர்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட சாதாரண வங்கி வாடிக்கையாளர்கள் மீது கடுமையான கட்டணங்களை விதித்து தங்கள் வருவாயைப் பெருக்கி வருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் மீது கரிசனமும், விவசாயக் கடன்கள் மற்றும் கல்விக் கடன்கள் வாங்கியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எனவும் வங்கிகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்.

இவைகளை மாற்றவேண்டுமென அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து இயக்கங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால் அரசாங்கமோ பொதுத்துறை வங்கிகளை இணைத்து வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கிச்சேவைகளை கிராமப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டிய தேவை அதிகரித்து வரும் நேரத்தில், வங்கிகளை இணைத்து கிளை மூடல்களுக்கு வழிசெய்து கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் வெற்றிடத்தில், எந்த தனியார்கள் ஏமாற்றினார்களோ, அவர்களுக்கே வங்கிகள் தொடங்கும் உரிமம் வழங்கி, வரலாற்றை 50 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு செல்லும் முயற்சி நடைபெறுகிறது.

வளமான இந்தியா வேண்டுமென அனைவருமே விரும்புகின்றனர். வலிமையான பொருளாதார சூழல் இருக்க வேண்டுமென அனைவருமே விழைகிறோம். இச்செயல்களுக்கு வங்கித்துறை முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. அப்படி பங்காற்றவேண்டுமானால் வங்கித்துறை பொதுத் துறையில் இருக்க வேண்டும். மக்களின் பணத்தோடு சம்பந்தப்பட்டவை வங்கிகள். வங்கிகளில் உள்ள பணம் பொதுமக்களின் மேன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

தனியார் கொள்ளைக்கு தாரைவார்க்கப் படக்கூடாது. வங்கி வசதிகள் என்பது அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான உந்து சக்தியாக வங்கிகள் இயங்க வேண்டும். எனவே, பொதுத்துறை வங்கிகளின் பொன் விழாவைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் வங்கிகள் நாற்கர சந்தியின் நடுவே நிற்கின்றன. பலதரப்பட்ட கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கொள்கைகளை மாற்றவேண்டும். அதற்காகப் போராடவேண்டும். பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதும், தனியார் மயத்தை எதிர்த்துப் போராடுவதும் தேச பக்த கடமையாகும்.

இத்தகைய பின்னணியில் இந்த பொன்விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொதுத்துறை வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகவே இயங்க வேண்டும். இந்த தேச பக்தப் பணியில் எத்தனை இடர் வந்தாலும் தாங்கிகள் கொண்டு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தனது கடமைகளைத் தொடர்ந்து செய்யும் பொதுத்துறை வங்கிகளை காப்போம். பொது மக்களின் சேமிப்பை காப்போம் என பொன்விழா சபதமேற்போம்.

சி.எச்.வெங்கடாசலம், பொதுச் செயலாளர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்.

Next Story