தூக்கத்தில் நடக்கும் வியாதியின், விஞ்ஞான பின்னணி


தூக்கத்தில் நடக்கும் வியாதியின், விஞ்ஞான பின்னணி
x
தினத்தந்தி 12 Aug 2019 9:38 AM GMT (Updated: 12 Aug 2019 9:38 AM GMT)

தூங்கும் போது, தூக்கத்தில் புரண்டு படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொள்வது சகஜம். ஆனால் சிலர் இதைத் தவிர மேலும் சில செய்கைகள் செய்வர். அதில் ஒன்று தூக்கத்தில் நடப்பது.

தூக்கத்தில் நடப்பவர்களில் சிலர், படுக்கையில் இருந்து எழுந்து படுக்கை அறையை அல்லது வீட்டில் உள்ள அறைகளின் கதவுகளைத் திறந்து வீட்டை வலம் வருவதும் உண்டு. இவர்களை சாதாரண தூக்கத்தில் நடப்பவர்கள் என்று கூறலாம். இதிலும் சில மோசமானவர்கள் உண்டு. இவர்கள் படுக்கையிலிருந்து எழுவது மட்டுமன்றி, உடைகளை சீராக உடுத்தி கார் அல்லது வாகனத்தை இயக்கி சில மைல்கள் தூரம் சென்று திரும்புவார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் சில இடங்களில் இம்மாதிரி தூக்கத்தில் நடப்பவர்களால் பல குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த குற்றப்பட்டியலில் சாதாரண திருட்டு முதல் கொலை வரை நடந்துள்ளன.

தூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது?, அப்போது அவர்கள் தங்கள் கனவுலகத்தில் நிகழ்வதை நடத்துகிறார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா?

தூக்கத்தில் நடப்பது என்பது, ஒரு மனிதன் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நிலையில் நிகழ்கிறது. இந்த தூக்கத்தை ஆங்கிலத்தில் NREM Sleep என்பர். அப்போது, நமது மூளையின் அலைகள் மிகவும் மெதுவாக நகர்கின்றன. மேலும், மூளையின் ‘கிரே மேட்டர்’ (Grey matter) பகுதி அமைதியாகவும், செயல்பாடு இன்றியும் காணப்படும்.

ஒரு நாளின் பகல் பொழுதில் நம் மூளையின் செயல்பாடு ஒரு தேன் கூட்டில் இருக்கும் நிகழ்வு போன்றது. ஆனால் அந்த NREM தூக்க நிலையில் அதே தேனீக்கள் இசைக்கும் வெறும் ரீங்காரமாக, இன்னும் அமைதி நிலையை எட்டாமல் காணப்படும்.

எனவே, அந்த தூக்க நிலையில் நமது உடல் நகரும் நிலையில் இருக்கும். அப்போது அது தூங்கும் மூளையுடன் ஜோடி சேரும். NREM தூக்க நிலையில் மூளை அமைதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் நமக்கு கனவு காணும் நிலைக்கு அழைத்துச்செல்லாது. எனவே தூக்கத்தில் நடப்பவர்கள் கனவுகளால் நடத்தப்படுபவர்கள் என்று எண்ணுவது தவறு.

இவ்வாறு தூக்கத்தில் நடப்பது, ஆழ்ந்த தூக்கத்தில் ஏற்படும் தூண்டுதல் கோளாறு என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். தூக்கத்தில் நடப்பது எவ்வாறு நடைபெறுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கும் புதிராகவே உள்ளது.

இருப்பினும் ‘காபா’ (GABA- Gamma Amino Butyric Acid) என்னும் ரசாயன செயல்பாட்டினால் இது நடக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘காபா’ மூளையின் செயல்பாட்டை இயக்கும் இயந்திர அமைப்பைத் தடுக்கிறது. இது சரியாக செயல்படும் போது ஒருவருக்கு தூக்கம் இயல்பாக நிகழ்கிறது. மேலும், தூக்கத்தில் தசைகளின் இயக்கத்தை அது கட்டுப்படுத்துகிறது.

குழந்தைகளாக இருக்கும்போது ‘காபா’ வை வெளியேற்றும் நியூரான்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் முழுவதும் வளர்ந்து மூளையின் செயல்பாட்டை முழுவதும் இயக்கும். ஆனால் அந்த இயந்திர அமைப்பை கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது.

எனவே குறைவான அளவு உள்ள ‘காபா’ வினால் குழந்தைகள் தூக்க நடைக்கு உள்ளாவது இயல்பு எனக்கூறலாம். ஏனெனில் அந்த இயந்திர அமைப்பு உடம்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தூக்கத்திலும் இயங்க வைக்கும்.

சில வளர்ந்த நபர்களில் கூட ‘காபா’ சுரத்தல் முழுவதும் இல்லாமல் இருக்கும். இது சில சுற்றுப்புற சூழ் நிலைகளால் கூட நிகழலாம். இதனால்தான் வயோதிகம் ஆனபோதும் தூக்கத்தில் நடப்பது நிறுத்தப்படாமல் நடந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் தூக்கத்தில் நடப்பவர் என்றால் அந்த பழக்கம் அவரது மூத்த குடும்ப உறுப்பினர்களால் அவருக்கு அளிக்கப்பட்டதாக இருக்கும். சில ஆய்வு களின் படி பெற்றோர்களில் ஒருவருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தால், அவரது குழந்தைக்கு அந்த பாதிப்பு ஏற்பட 45 சதவீதம் வாய்ப்பு உள்ளது. தாய்-தந்தை இருவருக்குமே இந்த பாதிப்பு இருந்தால் அவர்களின் குழந்தைக்கு இந்த பாதிப்பு வர 60 சதவீதம் வாய்ப்பு உண்டு.

Next Story