மூன்று தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் சென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது


மூன்று தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் சென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 21 Aug 2019 7:04 AM GMT (Updated: 21 Aug 2019 7:04 AM GMT)

மூன்று தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

லாப நோக்கம்

பங்கு வியாபாரம் தொடர் ஏற்றம் கண்ட நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமாக உயர்ந்து இருந்தது. எனவே முதலீட்டாளர்கள் பலரும் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி லாப நோக்கத்துடன் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். சந்தைகள் சரிய அது முக்கிய காரணமாக இருந்தது. சர்வதேச நிலவரங்களும் ஊக்கம் அளிப்பதாக இல்லை.

அந்த நிலையில் மும்பை சந்தையில் பல்வேறு துறை குறியீட்டு எண்களும் சரிவடைந்தன. அதில் மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.88 சதவீதம் குறைந்தது. அடுத்து பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டு எண் 3.20 சதவீதம் இறங்கியது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் மாருதி சுசுகி, டாட்டா மோட்டார்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், இந்துஸ்தான் யூனிலீவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட 12 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் யெஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, ஐ.டி.சி., ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, வேதாந்தா, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, எச்.டீ.எப்.சி. உள்பட 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 74.48 புள்ளிகள் சரிவடைந்து 37,328.01 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,511.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,219.90 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 918 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,524 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 141 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,305 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.1,824 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 36.90 புள்ளிகள் குறைந்து 11,017 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,076.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10,985.30 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story