உஷாரய்யா உஷாரு.. மனைவியோடு வாழும் ஆண்களை தவறிழைக்க வைக்கும் ஒருசில பெண்கள்


உஷாரய்யா உஷாரு.. மனைவியோடு வாழும் ஆண்களை தவறிழைக்க வைக்கும் ஒருசில பெண்கள்
x
தினத்தந்தி 25 Aug 2019 2:30 AM GMT (Updated: 23 Aug 2019 7:24 AM GMT)

வார இறுதி நாள். நள்ளிரவு நேரம். பிரபலமான ஓட்டல் ஒன்றில் நெருக்கமாக பல ஜோடிகள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு மூலையில் ஜோடியாக அமர்ந் திருந்த இருவருக்கும் முப்பது வயதிருக்கும்.

அவன் அதிகமாக குடித்துக்கொண்டிருந்தான். உடனிருந்தவள், குடிப்பதுபோல் பாவனை செய்தபடியே அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அவர்களது பேச்சில் இருந்து, இருவரும் முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த காதலர்களாக இருந்ததையும்- பின்பு அவன் மட்டும் பிரிந்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவருவதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

அவனோடு அவள் மீண்டும் சமீபத்தில் உறவைப் புதுப்பித்திருக்கிறாள். இருவரும் சேர்ந்து வெளிஇடங்களில் தங்கிக்கொண்டிருப்பதையும் அவ்வப்போது அவள் கோடிட்டுக் காட்டி பேசிக்கொண்டிருந்தாள். ‘மனைவியிடம் இருந்து பிரிந்து வா என்றும், பெருமளவு பணத்தைக்கொடுத்து அவளுக்கு விவாகரத்து வழங்கிவிட்டு தாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும்’ அவள், போதையில் இருந்த அவனிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தாள்.

தாம் இருவரும் வாழ்க்கையில் இணைந்தால், தனது வங்கி கணக்கில் லட்சங்களில் இருக்கும் பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், தனது சொத்துக்களுக்கும் உரிமைகொண்டாடலாம் என்றும் ஆசைகாட்டி பேசியவள், அவன் தனது மனைவியை எப்படி விவாகரத்து நிலைக்கு தள்ளவேண்டும் என்பதற்கு கொடுத்த ‘ஐடியா’தான் அதிர்ச்சியின் உச்சம்.

போதையில் அவர்களுக்குள் நடந்த உரையாடல் அப்படியே இடம்பெறுகிறது.

அவள்: இப்போது உன் மனைவி எங்கே இருக் கிறாள்?

அவன்: குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருக்கிறது. பிரசவத்திற்கு சென்றவள், குழந்தையோடு தாய் வீட்டிலேயே இருக்கிறாள்.

அவள்: உனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள்கூட ஆகியிருக்கவில்லையே.. அதற்குள் ஏன் அவசரப்பட்டுவிட்டாய்?

அவன்: நான் அவசரப்படவில்லை. அவள்தான் விரைவாக தாய்மையடைய விரும்பியிருக்கிறாள். அது ஒரு ‘ஆக்சிடென்ட்’, என்னை மீறி எப்படியோ நடந்துவிட்டது.

அவள்: சரி. அதைவிடு. நடந்தது நடந்துவிட்டது. இனி நான் சொல்வதை நீ அப்படியே கேட்கவேண்டும்.

அவன்: சொல்.

அவள்: உன் குழந்தையை பார்க்கப்போகாதே.

அவன்: போகாமல் இருந்தால்..?

அவள்: (ஆத்திரத்தில் கத்திக்கொண்டு) போகாதே! குழந்தையை ஒரு போட்டோ எடுத்து அனுப்பச்சொல்லு..

அவன்: சரி.. அதைவைத்து என்ன பண்ணசொல்றே?

அவள்: இவ்வளவு நாள் அவள்கூட குடும்பம் நடத்தியிருக்கியே, அவளுக்கு நெருக்கமான நண்பன்னு யாரையாவது உனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறாளா?

அவன்: (சிறிது நேரம் யோசித்துவிட்டு) அவளோடு முன்பு வேலைபார்த்த ஒரே ஒருவரை மட்டும் அறிமுகம் செய்துவைத்திருக்கிறாள். (அந்த நபரின் பெயரையும் சொல்கிறான்)

அவள்: அவனுக்கு எத்தனை வயதிருக்கும்?

அவன்: இளைஞர்தான். அவர் ரொம்ப நல்லவர். எனக்குகூட பல நேரங்களில் உதவியிருக் கிறார்.

அவள்: அவருக்கு சர்டிபிகேட் கொடுக்கவா சொன்னேன். அவன்தான் நமக்கு துருப்புச் சீட்டு..

அவன்: எப்படி?

அவள்: குழந்தையின் போட்டோவை பார்த்துவிட்டு, ‘குழந்தை எனக்கு பிறக்கவில்லை. அது என்னை மாதிரி இல்லை. அந்த இளைஞனுக்கு பிறந்திருக்கிறது. அவனை மாதிரி இருக்கிறது’ என்று கூறி பிரச்சினையை ஆரம்பித்துவை. மீதியுள்ளதை நான் பார்த்துக்கிறேன்.

அவன்: (முகத்தில் அதிர்ச்சி ஏற்படுகிறது) அது எனக்கே அவமானமாகிவிடும். அப்படி எல்லாம் செய்ய முடியாது..

அவள்: ஏன் முடியாது. பின்னே எதுக்கு என்னை மீண்டும் தேடிவந்தாய்? ஏன் தினமும் என்னோடு வந்து தங்குகிறாய்? நான் சொல்றதை கேளு.. உன்னோடு சேர்ந்து நான் வாழணும். அதுக்கு நான் என்னவேணும்னாலும் பண்ணுவேன். நீயும் அதற்கு ஒத்துழைச்சே ஆகணும் (கத்துகிறாள்)

அவன் அடங்கிஒடுங்கிப்போகிறான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஆத்திரத்தில் மீதம் இருப்பதையும் குடித்துவிட்டு, ஏதேதோ உளறுகிறான். அவள் கையை பிசைந்துகொண்டு அங்கும் இங்குமாக பார்த்துக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவன் போதையில் தன்னை மறந்து அந்த மேஜையிலே படுத்துவிட்டான்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது நமக்கு முக்கியமல்ல. மனைவியோடு நிம்மதியாக வாழும் ஆண்களை இப்படிப்பட்ட ஒருசில பெண்கள் எப்படி தவறிழைக்கவைக்கிறார்கள் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

- உஷாரு வரும்.

Next Story