தொட்டில் தானாக ஆடும்.. குழந்தைக்கு தாலாட்டும் பாடும்..


தொட்டிலை ஆட்டும் கருவி; தானாகவே ஆடும் தொட்டிலின் அருகில் மனைவியுடன் வீரமணி...
x
தொட்டிலை ஆட்டும் கருவி; தானாகவே ஆடும் தொட்டிலின் அருகில் மனைவியுடன் வீரமணி...
தினத்தந்தி 15 Sep 2019 7:44 AM GMT (Updated: 15 Sep 2019 7:44 AM GMT)

தாய் மடிக்கு இணையானது தாயின் புடவையில் கட்டிய தொட்டில். பசியோடு அழும் குழந்தையைகூட தாயின் புடவையில் கட்டிய தொட்டிலில்போட்டு ஆட்டினால், பசி மறந்து தூங்கிவிடும்.

முன்பெல்லாம் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வயல் வேலைகளுக்கு செல்வார்கள். அப்போது கைக்குழந்தையையும் கொண்டுசென்று, வயல் வரப்பில் நிற்கும் மரத்தில் தனது புடவையை தொட்டிலாக கட்டி அதில் குழந்தையை படுக்கவைத்துவிடுவார்கள். படுக்க வைத்து ஆட்டி தூங்க வைத்துவிட்டு வயல் வேலைகளை கவனிப்பார்கள். இடையில் குழந்தை பசியால் அழும்போது, சேறும் சகதியுமாக ஓடிவரும் தாய் வாய்க்கால் தண்ணீரில் கைகளை அலம்பிவிட்டு குழந்தையை வாரி எடுத்து பசியை போக்கி மறுபடியும் அந்த தொட்டிலில் படுக்க வைத்து சிறிது நேரம் தாலாட்டு பாடி தூங்க வைத்துவிட்டு தனது வேலையை தொடர்வார்.

காலப்போக்கில் தாயின் புடவையில் தொட்டில்கட்டுவது குறைந்து, மரப் பலகையில் பெட்டிபோன்று அழகிய தொட்டில்கள் வடிவமைக்கப்பட்டன. அடுத்து ‘ஸ்பிரிங்’ தொட்டில்கள் பலவிதங்களில் உருவாகின. ஒருமுறை ஆட்டிவிட்டாலே சிறிது நேரம் அசைந்தாடும்தன்மை கொண்டவையாக அவை இருந்தன. ஆனாலும் அதைகூட செய்வதற்கு பெரும்பாலான இளம்தாய்மார் களுக்கு நேரமில்லை. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுவதற்கும் - தாலாட்டு பாடுவதற்கும் அவர்கள் நேரமின்றி தவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தாய்மார்களின் தவிப்பைபோக்க, புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் எந்திர தொட்டிலை வடிவமைத்துள்ளார். அது குழந்தை படுக்கும் தொட்டிலை இயல்பான வேகத்தில் ஆட்டுவதோடு, குழந்தை தூங்குவதற்காக தாலாட்டும் பாடுகிறது. அதற்காக அவர் எந்திர தொட்டிலில் ஸ்பீக்கர்களையும் பொருத்தி இருக்கிறார். குழந்தை தூங்கியதும் தொட்டிலின் இயக்கத்தை நிறுத்திவிடலாம்.

இந்த நவீன தொட்டிலை வடிவமைக்கும் எண்ணம் வீரமணிக்கு உருவாக என்ன காரணம்? அவரே விளக்குகிறார்..

‘‘என் மனைவி ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார். இரட்டைக் குழந்தைகளை பராமரிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் அழும். ஒரு குழந்தையை என் மனைவி தூக்கி பாலூட்டி தூங்க வைப்பதற்குள், அடுத்தது அழும். பின்னர் அதை பசியமர்த்தி தூங்க வைப்போம். இப்படி சில மாதங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அறுவை சிகிச்சை செய்ததால் என் மனைவியால் சுறுசுறுப்பாக செயல்படமுடியவில்லை. குழந்தைகள் அவ்வப்போது அழுததால் இரவில் விழித்திருந்து தொட்டிலை ஆட்டிக்கொண்டிருக்கவேண்டிய சூழ்நிலை உருவானது.

இப்படி சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் புதுக்கோட்டைக்கு பஸ்சில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் பஸ் கண்ணாடியில் உள்ள தண்ணீரை துடைக்க வைப்பரை டிரைவர் இயக்கினார். அதை பார்த்ததும், ‘மோட்டாரை பயன்படுத்தி அதுபோல் தொட்டிலையும் ஆட்டச்செய்யலாமே!’ என்ற எண்ணம் உருவானது. புதுக்கோட்டையில் இறங்கியதும் முதல் வேலையாக ஒரு பழைய இரும்பு கடைக்கு போய் 2 வைப்பர் மோட்டார்களை வாங்கி வந்தேன்.

மோட்டாரை பொருத்தி, நண்பர் ஒருவரின் உதவியுடன் இரும்பு பட்டைகளை வடிவமைத்து வீட்டின் உத்திரத்தில் பொருத்தினேன். அந்த மோட்டாரை இயக்க குறைந்த அளவு மின்சாரம் போதும் என்பதால் எலிமினேட்டர் பொருத்தி மின்விசிறிக்கு பயன்படுத்தும் ரெகுலேட்டர் மூலம் மின் இணைப்பை மோட்டாருக்கு கொடுத்து இயக்கிப் பார்த்தேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. தேவையான அளவில் ரெகுலேட்டர் மூலம் வேகத்தை கூட்டவும், குறைக்கவும் செய்யலாம்.

அந்த எந்திர தொட்டிலில் குழந்தைகளை தூங்கவைத்ததால், தொட்டிலை ஆட்டவேண்டிய வேலை இல்லாமல் போனது. குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடலும் அவசியம் என்பதால், மோட்டாருக்கு அருகில் ஸ்பீக்கர்களை பொருத்தி சி.டி.பிளேயர் மூலம் தாலாட்டு மற்றும் மெல்லிசைப் பாடல்களை இதமாக இசைக்க செய்தேன். அதன்பிறகுதான் தொட்டிலில் படுத்துக்கொண்டு தாலாட்டை கேட்ட படி தூங்கும் வாய்ப்பு எனது இரு குழந்தைகளுக்கும் கிடைத்தது. என் மனைவிக்கும் சுமை குறைந்தது. தொட்டிலுக்கு என் மனைவியின் புடவையை பயன்படுத்தினேன். தற்போது என் குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் அந்த எந்திர வடிவமைப்பை என் நண்பர்களுக்கு கொடுத்து உதவிவருகிறேன். கடந்த 6 ஆண்டுகளில், 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதனால் பயனடைந்திருக் கிறார்கள்’’ என்கிறார், வீரமணி.

அவரது மனைவி வனிதா சொல்கிறார்:

‘‘எந்திர தொட்டில் உருவாக்குவதாக என் கணவர் சொன்னபோது எனக்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. எந்திரம் தொட்டிலை வேகமாக ஆட்டிவிட்டால் குழந்தைகள் சுவற்றில் மோதி விடும் என்று அச்சப்பட்டேன். ஆனால் நான் பயந் ததுபோல் எதுவும் நடக்கவில்லை. ரெகுலேட்டர் இணைக்கப்பட்டதால், குழந்தைகளுக்கு தேவையான வேகத்தில் தொட்டிலை ஆட்டமுடிந்தது. குழந்தைகளும் அதில் நிம்மதியாக தூங்கினார்கள். இது எங்களுக்கு மட்டுமல்ல, எல்லா தாய்மார்களுக்கும் வரப்பிரசாதம்..’’ என்றார்.

Next Story