செப்டம்பர் 3 முதல் 13-ந் தேதி வரை பங்குகளில் இருந்து ரூ.2,031 கோடி அன்னிய முதலீடு வெளியேறியது


செப்டம்பர் 3 முதல் 13-ந் தேதி வரை பங்குகளில் இருந்து ரூ.2,031 கோடி அன்னிய முதலீடு வெளியேறியது
x
தினத்தந்தி 16 Sep 2019 8:46 AM GMT (Updated: 16 Sep 2019 8:46 AM GMT)

செப்டம்பர் 3 முதல் 13-ந் தேதி வரை பங்குகளில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீடு ரூ.2,031 கோடியாக உள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

எப்.பி.ஐ.

நம் நாட்டில் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அன்னிய நிதி நிறுவனங்கள், துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர்களை ஒன்றாக இணைத்து வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்.பி.ஐ) என்னும் புதிய பிரிவை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

செபி அமைப்பில் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாகவும் உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள் இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

நடப்பு நிதி ஆண்டில், முதல் மாதமான ஏப்ரலில் அன்னிய முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் இந்திய மூலதன சந்தையில் (பங்கு+கடன் சந்தைகள்) ரூ.16,093 கோடியை முதலீடு செய்தனர். மே மாதத்தில் அது ரூ.9,031 கோடியாக சரிவடைந்தது. ஜூன் மாதத்தில் ரூ.10,385 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஆகஸ்டு மாதத்தில் ரூ.5,920 கோடி விலகியது.

இந்த நிலையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் 3 முதல் 13-ந் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து ரூ.2,031 கோடியை விலக்கி உள்ளனர். இதே காலத்தில் கடன் சந்தையில் அவர்கள் ரூ.3,872 கோடியை முதலீடு செய்து இருக்கின்றனர். ஆக, இந்திய மூலதன சந்தையில் நிகர அடிப்படையில் ரூ.1,841 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து ரூ.1,629 கோடியை விலக்கினர். அந்த ஆண்டில் கடன் சந்தையில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீடு ரூ.42,951 கோடியாகும். ஆக, மூலதன சந்தையில் மொத்தம் ரூ.44,580 கோடி விலகி இருந்தது.

மத்திய அரசு அனுமதி

நம் நாட்டில் முதலீடு செய்ய அன்னிய நிதி நிறுவனங்களுக்கு 1992 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அது முதல் ஏறக்குறைய 28 வருடங்களாக அந்த நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன.

Next Story