பரஸ்பர நிதி துறையின் எஸ்.ஐ.பி. திட்டத்தில் முதலீட்டாளர் கணக்குகள் 3 லட்சம் அதிகரிப்பு


பரஸ்பர நிதி துறையின் எஸ்.ஐ.பி. திட்டத்தில் முதலீட்டாளர் கணக்குகள் 3 லட்சம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 6:37 AM GMT (Updated: 17 Sep 2019 6:37 AM GMT)

ஜூலை மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்களில் (எஸ்.ஐ.பி.) முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு இறங்குகிறது.

பரஸ்பர நிதி திட்டங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இத்துறையின் சொத்து மதிப்பில் அவர்களுடைய பங்களிப்பு உயர்ந்து வருகிறது. ஆகஸ்டு மாதத்தில் இத்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 4 சதவீதம் உயர்ந்து ரூ.25.47 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில், ஆகஸ்டு மாதத்தில் சீரான முதலீட்டு திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 3 லட்சம் உயர்ந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இத்திட்டங்களில் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 2.81 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்தில் அது 2.78 கோடியாக இருந்தது.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் சீரான முதலீட்டு திட்டங்களில் முதலீடு ரூ.8,230 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.7,554 கோடியாக இருந்தது. முந்தைய மாதத்தில் (ஜூலை) ரூ.8,324 கோடியாக இருந்தது. ஆகஸ்டு இறுதி நிலவரப்படி இத்திட்டங்களில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

தேர்ச்சி, அனுபவம்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story