இரண்டு தினங்கள் சரிவுக்குப் பின் சென்செக்ஸ் 83 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 23 புள்ளிகள் முன்னேறியது


இரண்டு தினங்கள் சரிவுக்குப் பின் சென்செக்ஸ் 83 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 23 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 19 Sep 2019 10:08 AM GMT (Updated: 19 Sep 2019 10:08 AM GMT)

இரண்டு தினங்கள் சரிவுக்குப் பின் புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் ஓரளவு நன்றாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 83 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23 புள்ளிகள் முன்னேறியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பங்குகளில் முதலீடு

பங்கு வர்த்தகம் இரண்டு தினங்கள் சரிவு கண்டிருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக குறைந்து இருந்தது. எனவே அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பலரும் அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்தனர். சந்தைகள் ஏற்றம் பெற அது முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் சர்வதேச நிலவரங்கள் காரணமாக அதிக ஏற்றம் இல்லை.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு குறியீட்டு எண்களும் ஓரளவு உயர்ந்தன. அதில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.54 சதவீதம் அதிகரித்தது. அடுத்து உலோகத் துறை குறியீட்டு எண் 1.34 சதவீதம் முன்னேறியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் டாட்டா ஸ்டீல், வேதாந்தா, பாரத ஸ்டேட் வங்கி, டெக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, என்.டி. பி.சி., பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, ஏஷியன் பெயிண்ட் உள்ளிட்ட 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் ஓ.என்.ஜி.சி., யெஸ் வங்கி, பார்தி ஏர்டெல், எச்.டீ.எப்.சி. வங்கி, சன் பார்மா, மாருதி சுசுகி, எச்.டீ.எப்.சி., ஐசி ஐசிஐ வங்கி உள்பட 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 82.79 புள்ளிகள் உயர்ந்து 36,563.88 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 36,712.99 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 36,465.92 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,244 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,240 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 158 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,046 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.1,998 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 23.05 புள்ளிகள் முன்னேறி 10,840.65 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,885.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10,804.85 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story