நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் புண்ணாக்கு ஏற்றுமதி 17% சரிந்தது


நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் புண்ணாக்கு ஏற்றுமதி 17% சரிந்தது
x
தினத்தந்தி 10 Oct 2019 9:58 AM GMT (Updated: 10 Oct 2019 9:58 AM GMT)

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) புண்ணாக்கு ஏற்றுமதி 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

எண்ணெய் வித்துக்கள்

பருத்தி விதை, எள், கடுகு, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) ரூ.6,222 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.4,762 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்தது. இதே காலத்தில் அளவு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 6 சதவீதம் உயர்ந்து 32 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில், செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதங்களில், புண்ணாக்கு ஏற்றுமதி அளவு அடிப்படையில் 17 சதவீதம் குறைந்து 12.51 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 14.99 லட்சம் டன்னாக இருந்தது.

முதல் 6 மாதங்களில் தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி 5.05 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 4.63 லட்சம் டன்னாக இருந்தது. வியட்நாம் நாட்டிற்கான ஏற்றுமதி 42 சதவீதம் சரிவடைந்து (2.93 லட்சம் டன்னில் இருந்து) 1.70 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

சோயா புண்ணாக்கு

ஆசியாவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில் சோயாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் மத்தியபிரதேசம் முன்னணியில் உள்ளது.

Next Story