6 தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் சென்செக்ஸ் 646 புள்ளிகள் ஏற்றம் ; நிப்டி 187 புள்ளிகள் முன்னேறியது


6 தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் சென்செக்ஸ் 646 புள்ளிகள் ஏற்றம் ; நிப்டி 187 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 10 Oct 2019 10:15 AM GMT (Updated: 10 Oct 2019 10:15 AM GMT)

6 தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் புதன்கிழமை அன்று பங்குச்சந்தைகள் சுறுசுறுப்பு அடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 646 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 187 புள்ளிகள் முன்னேறியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

தசரா விடுமுறை

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று 6-வது நாளாக பங்கு வியாபாரம் சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை அன்று தசராவை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. அந்த நிலையில், புதன்கிழமை அன்று முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். ஏனென்றால் தொடர் சரிவால் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து இருந்ததை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. நிதி நிலை முடிவுகள் சீசன் தொடங்குவதால் அது பற்றிய நம்பிக்கையும் சந்தைகளை ஏற்றம் காணச் செய்தது.

அந்த நிலையில் மும்பை சந்தையில் தொலைத் தொடர் புத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.45 சதவீதம் உயர்ந்தது. அடுத்து வங்கித் துறை குறியீட்டு எண் 3.67 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது.

இந்தப் பட்டியலில் இண்டஸ் இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், பாரத ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐடிசி, டாட்டா கன்சல்டன்சி, இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி. ஆகிய 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 645.97 புள்ளிகள் அதிகரித்து 38,177.95 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,209.84 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,415.83 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,241 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,280 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 178 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,178 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 186.90 புள்ளிகள் உயர்ந்து 11,313.30 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,321.60 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,090.15 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story