உலக அளவில், செப்டம்பர் மாதத்தில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் தங்கம் கையிருப்பு 75.2 டன் உயர்வு


உலக அளவில், செப்டம்பர் மாதத்தில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் தங்கம் கையிருப்பு 75.2 டன் உயர்வு
x
தினத்தந்தி 10 Oct 2019 11:11 AM GMT (Updated: 10 Oct 2019 11:11 AM GMT)

சர்வதேச முதலீட்டாளர்கள் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர். அதாவது, 2012-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இத்திட்டங்களில் பெரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தத் திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருக்கிறது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

உலக அளவில், செப்டம்பர் மாதத்தில், கோல்டு ஈ.டி.எப். எனப்படும் தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் தங்கம் கையிருப்பு 75.2 டன் உயர்ந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

பரஸ்பர நிதி துறையின் கோல்டு ஈ.டி.எப். திட்டம் தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் போன்றவற்றை நேரில் வாங்கும்போது அதன் தரத்தை மதிப்பீடு செய்வது சிரமம். மேலும் அவற்றை பாதுகாத்து வைப்பதில் இடர்பாடுகள் உள்ளன. அதே சமயம் தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக முதலீடு செய்யும்போது இதுபோன்ற தொல்லைகள் கிடையாது.

இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யூனிட்டுகள் வழங்கப்படும். அவை பங்குச்சந்தைகளிலும் பட்டியலிடப்படுகின்றன. எனவே அந்த யூனிட்டுகளை பங்குகளை போன்று எளிதில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும்.

அதிக அளவு முதலீடு

செப்டம்பர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர். அதாவது, 2012-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இத்திட்டங்களில் பெரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தத் திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில், அந்த மாதத்தில், உலக அளவில், தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் தங்கம் கையிருப்பு 75.2 டன் அதிகரித்து இருக்கிறது. இதனையடுத்து இத்திட்டங்களில் மொத்த தங்கம் இருப்பு 2,808 டன்னை எட்டி உள்ளது. இதில் வட அமெரிக்காவில் அதிகபட்சமாக 62 டன் அளவிற்கு கையிருப்பு உயர்ந்துள்ளது. இதன்படி அந்த பிராந்தியம் 83 சதவீத பங்கினைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் இந்த திட்டங்களில் தங்கம் கையிருப்பு 7.7 டன் உயர்ந்துள்ளது. ஆசியாவில் 3.9 டன் அதிகரித்து இருக்கிறது.

பங்கு வர்த்தகம்

நம் நாட்டைப் பொறுத்தவரை தங்கமும், பங்கும் நேர் எதிர் திசைகளில் பயணம் செய்கின்றன. அதாவது பங்கு வர்த்தகம் ஏற்றம் பெறும்போது தங்கம் விலை பொதுவாக குறைந்து விடும். இதே போன்று பங்கு வர்த்தகம் சரிவடைந்தால் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது.

நம் நாட்டில் தொடர்ந்து 6 நிதி ஆண்டுகளாக தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீடு தொடர்ந்து வெளியேறி வந்திருக்கிறது. 2013-14-ஆம் நிதி ஆண்டில் இத்திட்டங்களில் இருந்து ரூ.2,293 கோடி விலக்கப்பட்டது. 2014-15-ஆம் ஆண்டில் ரூ.1,475 கோடியும், 2015-16-ல் ரூ.903 கோடியும் வெளியேறியது. 2016-17-ல் ரூ.775 கோடி விலகியது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் இத்திட்டங்கள் ரூ.835 கோடியை இழந்தன. கடந்த நிதி ஆண்டில் (2018-19) ரூ.412 கோடி வெளியேறி இருக்கிறது.

புதிய முதலீட்டாளர்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story