மூன்றாவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்வு, நிப்டி 87 புள்ளிகள் அதிகரித்தது


மூன்றாவது நாளாக முன்னேற்றம்:  சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்வு,  நிப்டி 87 புள்ளிகள் அதிகரித்தது
x
தினத்தந்தி 16 Oct 2019 5:16 AM GMT (Updated: 16 Oct 2019 5:16 AM GMT)

தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வியாபாரம் முன்னேற்றம் கண்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 87 புள்ளிகள் அதிகரித்தது.

நிதி நிலை முடிவுகள்
இதுவரை வெளிவந்துள்ள நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை வட்டாரங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டனர். மேலும் அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரித்த நிலையில் சர்வதேச நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.

அந்த நிலையில் மும்பை சந்தையில் பல்வேறு குறியீட்டு எண்களும் ஏற்றம் கண்டன. அதில் மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.36 சதவீதம் உயர்ந்தது. அடுத்து உலோகத் துறை குறியீட்டு எண் 1.56 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 6 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் வேதாந்தா, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, இந்துஸ்தான் யூனிலீவர், கோட்டக் மகிந்திரா வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்பட 24 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டாட்டா மோட்டார், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 291.62 புள்ளிகள் அதிகரித்து 38,506.09 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,635.19 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,238.27 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,104 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,363 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 190 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,845 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.2,869 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 87.15 புள்ளிகள் உயர்ந்து 11,428.30 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,462.35 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,342.10 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story