இறக்குமதி 13 சதவீதம் குறைந்த நிலையில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,086 கோடி டாலராக குறைந்தது


இறக்குமதி 13 சதவீதம் குறைந்த நிலையில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,086 கோடி டாலராக குறைந்தது
x
தினத்தந்தி 17 Oct 2019 5:49 AM GMT (Updated: 17 Oct 2019 5:49 AM GMT)

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) மொத்தம் 15,957 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 2.39 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில் இறக்குமதி 7 சதவீதம் குறைந்து 24,328 கோடி டாலராக உள்ளது...

கடந்த செப்டம்பர் மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 13 சதவீதம் குறைந்த நிலையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,086 கோடி டாலராக குறைந்துள்ளது. அந்த மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 6.57 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

வர்த்தக பற்றாக்குறை
நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் சரக் குகள் ஏற்றுமதியை 35,000 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் ஏற்றுமதி 33,102 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. அது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீத வளர்ச்சியாக இருந்தது.

கடந்த மாதங்களில்...
நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் சரக்குகள் ஏற்றுமதி 0.64 சதவீதம் மட்டும் உயர்ந்து 2,607 கோடி டாலராக இருந்தது. மே மாதத்தில் அது 3.93 சதவீதம் அதிகரித்து 2,999 கோடி டாலராக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் 9.71 சதவீதம் சரிந்து 2,501 கோடி டாலராக குறைந் தது. ஜூலை மாதத்தில் 2,633 கோடி டாலராக உயர்ந்தது. ஆகஸ்டில் 2,613 கோடி டாலராக குறைந்தது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் 2,603 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2,787 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதி 6.57 சதவீதம் குறைந்துள்ளது. இதே மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 13 சதவீதம் குறைந்து 3,689 கோடி டாலராக இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,086 கோடி டாலராக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது 1,495 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்- செப்டம்பர்) மொத்தம் 15,957 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 2.39 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில் இறக்குமதி 7 சதவீதம் குறைந்து 24,328 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை (9,815 கோடி டாலரில் இருந்து) 8,370 கோடி டாலராக குறைந்து இருக்கிறது.

மறுஏற்றுமதி
நம் நாட்டில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சேவைகள் ஏற்றுமதி
பாரத ரிசர்வ் வங்கி 2011 ஜூன் மாதத்தில் இருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் ஏறக்குறைய 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.

Next Story