பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்


பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்
x
தினத்தந்தி 22 Oct 2019 7:45 AM GMT (Updated: 22 Oct 2019 7:45 AM GMT)

சிகரெட்டுகளை விட அதிக கேடு விளைவிக்கும், எளிய பீடி மீது அரசு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. சமீபத்தில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்ததையும், பின்னர் தமிழக அரசு இதை தடை செய்ததையும் பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் முக்கிய பிரச்சினையான, பரவலாக இருக்கும் பீடி பிடிக்கும் பழக்கம் மற்றும் புகையிலை போடும் பழக்கங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றி கவலை தெரிவிக்கின்றனர்.

புகையிலை புகைப்பதினால் புற்றுநோய் உண்டாகிறது என்பது 1950-களில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியான புகை பழக்கத்தினால் நுரையீரல், சிறுநீர் குழாயின் கீழ் பகுதி, சிறுநீரக பகுதிகள், சிறுநீர்ப்பை, காற்று செல்லும் செரிமான பாதையின் மேல் பகுதி, தொண்டைக் குழி, குரல் வளை, உணவுக் குழாய் மற்றும் கணையம் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நாசிக் குழி, மூக்கு எழும்பின் உட்பகுதி, மூக்கு துவாரம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. காளப்புற்று நோய் மற்றும் எழும்பு மஜ்ஜைகளில் ரத்தப் புற்றுநோயும் இதனால் உண்டாகின்றது என்று மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரகம், “பீடி பழக்கமும், பொது சுகாதாரமும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

பீடி புகையில் அதிக அளவில் தார், நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைட், அமோனியா, ஹைட்ரஜன் சையனைட், இதர எரிதன்மை கொண்ட பீனால்கள் மற்றும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன்கள், பென்சான்த்ராசீன், பென்சோபைரீன் மற்றும் கதிரியக்கத் தன்மை கொண்ட யுரேனியம் ஆகியவை உள்ளன.

பீடியை அடிக்கடி பற்ற வைக்க வேண்டியிருக்கும். பீடி சுற்றப் பயன்படுத்தப்படும் இலையின் ஊடுருவு திறன் குறைவாக இருப்பதாலும், முறையான வடிகட்டி இல்லாததாலும், சிகரெட் புகையைவிட பீடி புகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள் வெளியாகின்றன. சிகரெட்டை விட பீடியை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஊத வேண்டியுள்ளதால், நிக்கோட்டின், தார் மற்றும் கார்பன் மோனாக்சைட் ஆகியவை அதிக அளவில் உள்ளிழுக்கப்படுகின்றன.

நிரந்தரமான மூச்சுக்குழாய் அழற்சி நோய் மற்றும் இதயநோய்களை உருவாக்கும் ஆற்றல் பீடிகளுக்கு உண்டு.

“இ-சிகரெட்டுகளை மட்டுமல்லாமல் அனைத்து வகையான புகையிலை பொருட்களையும் தடை செய்ய மாநில அரசை கோருகிறோம். கிராமப்புறங்களில் பீடிப்பழக்கம் மிக அதிகமாக, குறைந்த வருமான கொண்ட மக்களிடம் உள்ளது. சிகரெட் பிடிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட பீடி பிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், பீடி தடை செய்யப்பட வேண்டும். ஜி.ஏ.டி.எஸ் 2 (உலக வயது வந்தவர்கள் புகையிலை கணக்கெடுப்பு 2016-17) அறிக்கையின்படி, தமிழகத்தில் பீடி புகைப்பவர்களின் விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. இது ஜி.ஏ.டி.எஸ் 1 (2009-10) அறிக்கையின் 5.3 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு புகையிலை கட்டுபாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் கூறுகிறார்.

ஜி.ஏ.டி.எஸ் என்பது வயது வந்தவர்களின் புகையிலை பயன்பாடு (புகைப்பது மற்றும் புகையில்லா முறைகள்) மற்றும் புகையிலை கட்டுபாட்டு குறியீடுகளை முறையாக கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட உலக அளவிலான தர நிர்ணய முறையாகும். டாடா சமூக அறிவியல் நிறுவனம், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரகம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இந்த ஆய்வை செய்கின்றன.

தற்போது தமிழகத்தில் சுமார் 10.8 சதவீத ஆண்கள் பீடி புகைக்கின்றனர். இவர்களில் 6.9 சதவீதத்தினர் கிராமப்புறங்களையும், 3.9 சதவீதத்தினர் நகர்புறங்களையும் சார்ந்தவர்கள். பெண்களில் இந்த விகிதம் மிகக் குறைவு.

புகையிலை உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. புகையிலை பயன்பாட்டில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. புகையிலை பயன்பாட்டினால் இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 லட்சம் மரணங்கள் புகையிலையை புகைப்பதினாலும், இதர மரணங்கள் புகையில்லா பயன்பாடுகளினாலும் ஏற்படுகின்றன. வாய் புற்றுநோய் தாக்கம், நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. உலகில் உள்ள மொத்த வாய் புற்றுநோய் தாக்கத்தில் பாதி அளவு எண்ணிக்கை இந்தியாவில் ஏற்படுகிறது.

தீர்வுகள்

மேலும் கடுமையான சட்டங்கள், விதிமீறல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முக்கியமாக சமூகத்தின் கீழ்தட்டு மற்றும் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அடிக்கடி புற்றுநோய்களை கண்டறியும் சோதனைகளை செய்து கொள்ள வலியுறுத்துதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல், சிறந்த உணவு பழங்கங்களை கடைப்பிடித்தல், வாய் மற்றும் பாலியல் ரீதியான சுகாதாரத்தை பேணுதல் போன்ற வழிமுறைகள் சில சாத்தியமான தீர்வுகளாக உள்ளன.

“அமெரிக்காவில் புகைபிடிப்பவர்களின் விகிதம் 40-45 சதவீதத்தில் இருந்து தற்போது 10-15 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் நுரையீரல் புற்றுநோய் தாக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில், தமிழகத்தில் புகைபிடிப்பவர்களின் விகிதம் 30-35 சதவீதத்தில் இருந்து 28-30 சதவீதமாக குறைந்தாலும், புகையில்லாத முறையில் புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் புற்றுநோய்கள் தாக்கம் அதிகரித்துள்ளது. புற்றுநோய் தாக்கத்தில் 40 சதவீதம் புகையிலையினால் ஏற்படுகிறது.

இதை குறைக்க முடிந்தால், நுரையீரல் புற்றுநோய் தாக்கம் பெரிதும் மட்டுப்படும். பீடி புகைத்தலின் கேடுகளை, புகையில்லாத முறையில் புகையிலை பயன்பாடுகளையும் உள்ளடக்கிய மொத்த புகையிலை நுகர்வின் பின்னணியில் பார்க்க வேண்டும்” என்று அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரும், துறைசார் வல்லுனரும், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற புற்றுநோய் எதிர்ப்பு போராளியுமான டாக்டர் வி.சாந்தா கூறுகிறார். இந்த துறையில் அவரின் முன்னோடியான செயல்பாடுகளுக்காக பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார்.



தமிழகம் முழுவதும் உள்ள மையங்களின் மூலம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் மக்களுக்கு புற்றுநோய் சோதனைகளை நடத்துகிறது. புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அந்நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை அளிக்கிறது. ஏதாவது உடல் உறுப்பு ஒன்று வித்தியாசமாக செயல்பட்டு, சாதாரண மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டுப்படாவிட்டால், உடனடியாக அதை ஸ்கேன் செய்து, புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்கிறார் டாக்டர் சாந்தா.

புகையிலையை பயன்படுத்துபவர்களுக்கு இது முக்கியமாக செய்யப்பட வேண்டும். உதாரணமாக வாய், கன்னம் அல்லது நாக்கில் ஏற்படும் புண்கள் குணம் அடையாமல் தொடர்ந்தால், குரல் மாறுபாடு அடைந்தால், உணவை விழுங்குவதில் தொடர்ந்து பிரச்சினை இருந்தால், சில நாட்களுக்கு மேல் இருமல் தொடர்ந்தால் போன்றவை, கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அறிகுறிகள் ஆகும். இதன் மூலம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் பீடி உற்பத்தி

தமிழகம், பீடி உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும், பீடி உற்பத்தி மற்றும் விற்பனையில் மிக அதிக எண்ணிக்கையில் பீடித் தொழிலாளர்கள் பணிபுரியும் மாநிலமாக இருப்பதாகவும், சுகாதாரம் மற்றும் சமூகநீதிக்கான மையம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. தினமும் 50 லட்சம் பீடிகளுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் 75 பெரிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 5 லட்சம் முதல் 50 லட்சம் பீடிகளை தினமும் உற்பத்தி செய்யும் 500 சிறு நிறுவனங்களும் உள்ளன. இந்த துறையில் மொத்தம் ஐந்து முதல் ஏழு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிவதாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story