புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 44 புள்ளிகள் முன்னேறியது


புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 44 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 7 Nov 2019 10:35 AM GMT (Updated: 7 Nov 2019 10:35 AM GMT)

புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

மும்பை

புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 44 புள்ளிகள் முன்னேறியது.

நிதி நிலை முடிவுகள்

நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்றாக இருந்தது பங்கு வியாபாரத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளில் அதிக முதலீடு செய்தனர். சர்வதேச நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் பங்கு சந்தைகள் ஏற்றம் பெற்றன.

அந்த நிலையில், மும்பை சந்தையில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.59 சதவீதம் உயர்ந்தது. அடுத்து வங்கித் துறை குறியீட்டு எண் 1.39 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எச்.டீ.எப்.சி., இண்டஸ் இந்த் வங்கி, எச்.டீ.எப்.சி. வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, எல் அண்டு டி உள்பட 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி., மாருதி சுசுகி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐ.டி.சி. உள்ளிட்ட 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 221.55 புள்ளிகள் அதிகரித்து 40,469.78 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 40,606.91 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,186.29 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,224 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,280 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 199 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,803 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,818 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 43.80 புள்ளிகள் உயர்ந்து 11,961 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,002.90 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,850.25 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story