தினம் ஒரு தகவல் : மருத்துவத்தில் தேன்...!


தினம் ஒரு தகவல் : மருத்துவத்தில் தேன்...!
x
தினத்தந்தி 15 Nov 2019 10:22 AM GMT (Updated: 15 Nov 2019 10:22 AM GMT)

நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உள்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்று புண்ணை ஏற்படுத்தாமல், முழுமையாக ரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.

தமிழரின் சித்த மருத்துவ முறையில் ஆஸ்துமா,அலர்ஜி, சைனஸ் உடையோருக்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 தேக்கரண்டி தேனுடன் 2 குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தொண்டை தொணியே போய் குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு, வெற்றிலை சாறு சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை உட்கொள்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.

தீக்காயங்கள், தோல் புண்களையும் ஆற்றும் கிருமி நாசினி தன்மையுடையது தேன் ஆகும். இரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் துணை மருந்தாகவும், நேரடி சிகிச்சையிலும் தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. மருத்துவ ஆலோசனைக்கு பின், வில்வப்பொடியுடன், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து உணவுக்கு முன் எடுத்துவர நல்ல குணம் கிடைக்கும்.

ரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது. இதயம் பலப்படவும், ரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொழுப்பு குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது. வெது வெதுப்பான நீரில் தேன் அருந்த உடல் எடை குறையும் எனும் பரவலான நம்பிக்கைக்கு, வலுசேர்க்கும் ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து வருகிறது. எனினும், உடல் எடை குறைகிறதோ இல்லையோ, தேனின் அற்புத குணங்களால் உடல் ஆரோக்கியம் கட்டாயம் மேம்படும்.

உணவே விஷமாகி போகும் தற்காலத்தில், நோயை வெல்வதை விடுங்கள், ஆரோக்கியத்தை தக்க வைப்பதே சவால்தான் என்றாகிவிட்டது. சுத்த தேனில் உள்ள தேன் மெழுகோ அல்லது மகரந்த தூளோ சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும், கவனம் தேவை. வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் உடற்சூட்டைப் பொறுத்து உட்கொள்வது சிறந்த பலன்களைத் தரும். 

Next Story