6 மாதத்தில் ‘மோடி 2.0’ அரசின் மகத்தான சாதனைகள்


6 மாதத்தில் ‘மோடி 2.0’ அரசின் மகத்தான சாதனைகள்
x
தினத்தந்தி 3 Dec 2019 8:51 AM GMT (Updated: 3 Dec 2019 8:51 AM GMT)

இந்திய மக்கள் மிகுந்த தீர்மானத்தோடு வழங்கிய தீர்ப்பு மற்றும் அவர்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு உகந்த வகையில், பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியிருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திரமோடியின் துடிப்புமிக்க தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டது.

2019 நவம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு தனது 2-முறை ஆட்சியின் முதல் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த ஆறு மாத காலத்திற்குள்ளாகவே மோடி 2.0 அரசு ஏழைகள், அடித்தட்டு மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிப்பிரிவினர் ஆகியோரின் வாழ்வில் சாதகமான பயன்களைக் கொண்டு வரும்படியான வரலாற்றுச் சிறப்புமிக்க, நிலைமையை தலைகீழாக மாற்றி அமைக்கக் கூடிய பல முடிவுகளை எடுத்திருந்தது. மோடி அரசு எடுத்த முடிவுகள் அனைத்தின் நீண்ட நெடிய குறிக்கோள் மற்றும் உணர்வாக இந்தியாவிற்கே முதன்மையாக முக்கியத்துவம் தருவது என்பதே அமைந்திருந்தது.

இந்திய மக்கள் மிகுந்த தீர்மானத்தோடு வழங்கிய தீர்ப்பு மற்றும் அவர்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு உகந்த வகையில், பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியிருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திரமோடியின் துடிப்புமிக்க தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டது. அனைவரோடும் இணைந்து, அனைவரின் மேன்மைக்காக என்ற தொலைநோக்கின் பரந்த வடிவமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்ற வகையில் செயல்படுவது என்ற இலக்கை நோக்கி மோடி 2.0 ஆட்சி உறுதியோடு செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க.வின் பல முக்கியமான உறுதி மொழிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு மற்றும் பிரிவு 35 ஏ ஆகியவற்றை நீக்குவது, முத்தலாக் மசோதாவை சட்டமாக்குவதன் மூலம் முஸ்லீம் பெண்களுக்கு நியாயத்தை வழங்குவது ஆகியவை அனைவராலும் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.

மோடி 2.0 ஆட்சியின் முதல் ஆறுமாத காலத்தில் உச்சநீதிமன்றம் அயோத்தி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையும் நாடு கண்டது. இது ராமஜென்மபூமியில் மகத்தானதொரு ராமர் கோயிலை கட்டுவதற்கான பாதையை வகுத்துள்ளது. ஒரு சில முக்கிய அரசியல் எதிரிகள் அயோத்தி குறித்த தீர்ப்பை தாமதப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த போதிலும் பா.ஜ.க.வும் அதன் இணைப்பு அமைப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் ஆக்கப்பூர்வமான பங்கினை வகித்தன. தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதைப் போல அயோத்தி குறித்த தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் நிலவிய அமைதியும் நல்லிணக்கமும் இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கான சான்றாகத் திகழ்ந்தன.

மோடி அரசின் கீழ் ஒரு நாடு, ஒரே கொடி, ஒரே அரசமைப்புச் சட்டம் என்பதும் நனவாகியது. பா.ஜ.க. தலைவரும் மத்திய அரசின் உள்துறை மந்திரியுமான அமித்ஷா நாடாளுமன்றத்தில் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை அகற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தருணமாகும்.

வெகுவிரைவிலேயே 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரமாக மாறுவதற்கான சரியானதொரு பாதையில்தான் இந்தியா நடைபோட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது; வரி, தொழிலாளர், வங்கி ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது ஆகிய முக்கியமான, கேந்திரமான முடிவுகள் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தற்போது செயல்பட்டு வரும் பெருநிறுவனங்களின் மீதான வரி 22 சதவீதமாகவும் உள்நாட்டில் தொடங்கப்படும் புதிய உற்பத்தி நிறுவனங்களின் மீதான வரி 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக பொருளாதாரத்திலேயே மிகவும் போட்டிக்குரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.

வங்கித் துறையின் நலத்தை மேம்படுத்த பெருமளவிலான வங்கி இணைப்புகளுக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, வங்கித் துறையின் நலத்தை மேம்படுத்த 10 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. 2019-2020-ம் ஆண்டில் வங்கிகளில் ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் செலுத்தப்பட்டுள்ளது.

திவால் மற்றும் நொடிப்புக்கான விதிமுறைகளின் கீழ் உரிய தீர்வுகளைக் காண மோடி அரசு பெரும் முனைப்பைச் செலுத்தியுள்ளது. இதன் விளைவாக சச்சரவுகளைத் தீர்ப்பது; அமைப்பை முழுமையாக சுத்திகரிப்பது ஆகியவற்றுக்கு சராசரியாக 374 நாட்கள் மட்டுமே பிடித்தன என்பதும் இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா, உலகத்தில் தனக்கென ஒரு தனிமுத்திரையையும் பதித்து வருகிறது. வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது; உலக அளவிலான புத்தாக்கங்களுக்கான அட்டவணை போன்ற உலக அளவிலான தரவீடுகள் பலவற்றிலும் இந்தியா மிக வேகமாக உயர்ந்து வருவதே இந்த உண்மைக்கான சான்றாக விளங்குகிறது.

வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இந்தியா தற்போது 190 நாடுகளில் 63-வது நாடாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் தரவீடுகளில் இந்தியா 67 இடங்கள் முன்னேறியுள்ளது. 2011 முதல் இதுவரை எந்தவொரு பெரிய நாடும் இவ்வளவு உயரத்தை எட்டியதில்லை. புதிய தொழில்களை தொடங்குவதற்கு ஏற்ற சூழலைக் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இப்போது விளங்குகிறது.

உலக அளவிலான புத்தாக்கங்களுக்கான அட்டவணையில் 2015-ம் ஆண்டில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா 2019-ல் 52-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2019-ம் ஆண்டிற்கான ஐ.எம்.டி.யின் உலக டிஜிட்டல் போட்டித்திறனுக்கான அட்டவணையில் இந்தியாவின் இடம் 48-வது இடத்தில் இருந்து 44-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2019-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார அரங்கின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையில் போட்டித்திறனுக்கான அட்டவணையில் இந்தியா 34-வது இடத்திற்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக மோடி 2.0 அரசு தனித்துவமான வகையில் பிரதமர் விவசாயிகள் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் ரூ. 6,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 14.5 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.

தூய்மையோடு உயரத்தை நோக்கி முன்னேறிச்செல்லும் மோடி அரசு ரபேல் விமானத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளன. மக்களின் பங்கேற்பையே மோடி பெரிதும் நம்பியிருக்கிறார். இதன் மூலம் அவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர இயலும்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலமும், மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதன் மூலமும் அவர் இதை நிரூபித்திருக்கிறார். இப்போது அவர் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்படியான பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்ற அறைகூவலை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேற்கொண்ட 15 நாள் பிரசாரத்தில் மட்டுமே 13,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திரட்டப்பட்டுள்ளன. இதுவே மிகப் பிரம்மாண்டமானதாகும்.

மெதுவாக ஓடும்போதும், நடைபயிற்சியை மேற்கொள்ளும்போதும் தெருக்களிலும் பொதுவழிகளிலும் சிதறிக் கிடக்கும் பாலிதீன் பொருட்களை சேகரித்து அவற்றை முறையாக அப்புறப்படுத்தும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். ஆறுமாத காலம் என்பது மிகவும் குறைவானதொரு காலமே ஆகும். என்றாலும் கூட நாம் திரும்பிப் பார்க்கும்போது மோடி 2.0 அரசு மகத்தான சாதனையை புரிந்துள்ளது என்பதை நம்மால் காண முடியும். 

- பிரகாஷ் ஜவடேகர்-மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி

Next Story