பங்குச்சந்தை பட்டியலில் சி.எஸ்.பீ. : முதல் நாளில் பங்கு விலை 54% ஏற்றம்


பங்குச்சந்தை பட்டியலில் சி.எஸ்.பீ. : முதல் நாளில் பங்கு விலை 54% ஏற்றம்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:41 AM GMT (Updated: 5 Dec 2019 11:41 AM GMT)

சி.எஸ்.பீ. வங்கியின் புதிய பங்குகள் நேற்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இப்பங்கு விலை 54 சதவீதம் ஏற்றம் கண்டது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பங்கு வெளியீடு

தனியார் துறையைச் சேர்ந்த சி.எஸ்.பீ. வங்கி புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. இந்த வெளியீடு கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது. அதில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.193-195-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

சி.எஸ்.பீ. வெளியீட்டில் ரூ.24 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்பட்டன. மேலும் ரூ.370 கோடி மதிப்பிலான பங்குதாரர்களின் 1.97 கோடி பங்குகளும் சந்தைக்கு வந்தது. முக்கிய முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு நீங்கலாக 1.15 கோடி பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில் 100.44 கோடி பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அது வெளியீட்டு அளவைக் காட்டிலும் சுமார் 87 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே வெளியீடு மகத்தான வெற்றி பெற்றது. பின்னர் ஒரு பங்கின் இறுதி விலை ரூ.195-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

சி.எஸ்.பீ. வங்கி பங்கு வெளியிடும் நோக்கத்துடன் 2015-ஆம் ஆண்டிலேயே செபிக்கு விண்ணப்பித்தது. ஆனால் அப்போது அந்த திட்டம் நிறைவேறவில்லை. ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின் இவ்வங்கி பங்கு வெளியீட்டில் களம் இறங்கி வெற்றிகரமாக நிதி திரட்டி இருக்கிறது.

பட்டியலிடப்பட்டன

சி.எஸ்.பீ. வங்கியின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் தொடக்கத்தில் இப்பங்கு ரூ.275-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.307-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.300.10-ல் நிலைகொண்டது. வெளியீட்டு விலையுடன் (ரூ.195) ஒப்பிடும்போது இது 54 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தையில் முதலில் இப்பங்கு ரூ.275-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.306.80-க்கு சென்றது. இறுதியில் 54 சதவீதம் அதிகரித்து ரூ.300.05-ல் நிலைகொண்டது.


Next Story