பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது ; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது


பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது ; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது
x
தினத்தந்தி 7 Dec 2019 7:32 AM GMT (Updated: 7 Dec 2019 7:32 AM GMT)

பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இறக்குமதிக்கான தேவையும் அதிகரித்தபடி உள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

அதிகரிக்கும் தேவை

2015-16-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் எண்ணெய் தேவை 18.47 கோடி டன்னாக இருந்தது. அடுத்த ஆண்டில் அது 19.46 கோடி டன்னாக உயர்ந்தது. 2017-18-ல் 20.62 கோடி டன்னாக அதிகரித்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 21.16 கோடி டன்னை எட்டியது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நம் நாடு 23.30 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்று பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. ஆக, எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

உற்பத்தி சரிவு

எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டில் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. 2015-16-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி 3.69 கோடி டன்னாக இருந்தது. அடுத்த ஆண்டில் அது 3.60 கோடி டன்னாக குறைந்தது. 2017-18-ல் 3.57 கோடி டன்னாக சரிந்தது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) 3.42 கோடி டன்னாக சரிவடைந்தது.

எண்ணெய் இறக்குமதி

நம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கான தேவையும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெருமளவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

2013-14-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 77 சதவீதம் என்ற அளவில் இருந்தது. 2014-15-ஆம் ஆண்டில் மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதியின் பங்கு 78.3 சதவீதமாக உயர்ந்தது. 2015-16-ஆம் ஆண்டில் அது 80.6 சதவீதமாக மேலும் உயர்ந்தது. 2016-17-ல் 81.7 சதவீதமாக அதிகரித்தது. 2017-18-ல் 82.9 சதவீதமாக உயர்ந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 83.7 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

சவாலாக இருக்கும்

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த 2013-14-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-22-ல், நாட்டின் மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதி கச்சா எண்ணெயின் பங்களிப்பை 10 சதவீதம் குறைத்து 67 சதவீதமாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த இலக்கை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அண்மைக் கால புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது 3 ஆண்டுகளுக்குள் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது பெரும் சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதி நிலவரம்

2016-17-ஆம் நிதி ஆண்டில், நம் நாடு 7,020 கோடி டாலருக்கு (சுமார் ரூ.4.70 லட்சம் கோடி) கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. 2017-18-ஆம் ஆண்டில் சுமார் 8,800 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 11,270 கோடி டாலர் செலவிட வேண்டி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இறக்குமதி செலவினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Next Story