தினம் ஒரு தகவல் : பிரசவ வேதனை குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்...!


தினம் ஒரு தகவல் : பிரசவ வேதனை குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்...!
x
தினத்தந்தி 11 Dec 2019 8:40 AM GMT (Updated: 11 Dec 2019 8:40 AM GMT)

சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2005-06-ம் ஆண்டில் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாசாரம் நமது நாட்டில் 9 சதவீதமாக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15 சதவீதம் என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், 2015-2016-ம் ஆண்டில் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இயல்புக்கு மாறான நிலையில் குழந்தை இருப்பது, நஞ்சுக்கொடி படுக்கையில் இருந்து ரத்தம் கசிவது, கட்டுப்படுத்த முடியாத உயர்ரத்த அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் உயிர்காக்கும் கருவியாக அறுவை சிகிச்சையை பயன்படுத்தலாம் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது பிரசவ வலி இயல்பாக தோன்றுவது இல்லை. பிரசவவலி அச்சமும் ஒரு காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் விட குழந்தை பிறக்கும் ராசி, நேரங்களை பெற்றோரே நிர்ணயிப்பதால் அறுவை சிகிச்சையை அதிகம் பேர் தேர்வு செய்கிறார்கள்.

உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின்போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மூன்றாவது பிரச்சினை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது அறுவை சிகிச்சை ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு தயாராகிவிடுவார்கள்.

முதல் பிரசவம் அறுவை சிகிச்சையாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப் பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக் கூடும். அத்தகைய நேர்வில் அறுவை சிகிச்சை முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக் கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில்தான் உள்ளது.

Next Story