நவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்தது


நவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 12 Dec 2019 11:01 AM GMT (Updated: 12 Dec 2019 11:01 AM GMT)

2022-ஆம் ஆண்டுக்குள் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆண்டு ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இதன்படி வருடத்திற்கு 6-7 சதவீத சராசரி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி 8,000 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

நவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சத வீதம் குறைந்துள்ளது என நவரத்தினம்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

900 டன் தங்கம்

நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.

அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங் கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக உள்ளது.

4.7 சதவீதம் குறைந்தது

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் ரூ.18,136 கோடிக்கு நவரத்தினங்களும், ஆபரணங்களும் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.19,039 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்துள்ளது என இத்துறைக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதே காலத்தில் அறுத்து, பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 25 சதவீதம் சரிவடைந்து ரூ.8,341 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.11,195 கோடியாக இருந்தது. எனினும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 21 சதவீதம் உயர்ந்து ரூ.7,893 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

2015-16-ஆம் நிதி ஆண்டில், ரூ.2.57 லட்சம் கோடிக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. 2016-17-ஆம் நிதி ஆண்டில் அது ரூ.2.37 லட்சம் கோடியாக குறைந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ.2.10 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 11 சதவீத சரிவாக இருந்தது. அந்த ஆண்டில் டாலர் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 3,748 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) 3,945 கோடி டாலர் அளவிற்கு ஏற்றுமதி இருக்கிறது.

பட்டை தீட்டுதல்

நம் நாட்டில் ஆபரணங்கள் வடிவமைப்பு, வைரங்களை அறுத்தல், பட்டை தீட்டுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு 29 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20) நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5-10 சதவீதம் குறையும் என ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்து இருக்கிறது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர், ஆபரணங்கள் மீதான மதிப்பு கூட்டிய வரி போன்றவையே இதற்கு முக்கிய காரணமாகும்.

மத்திய அரசு இலக்கு

2022-ஆம் ஆண்டுக்குள் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆண்டு ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இதன்படி வருடத்திற்கு 6-7 சதவீத சராசரி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி 8,000 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story