பங்குச்சந்தை பட்டியலில் உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்; முதல் நாளில் பங்கு விலை 51 சதவீதம் ஏற்றம்


பங்குச்சந்தை பட்டியலில் உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்; முதல் நாளில் பங்கு விலை 51 சதவீதம் ஏற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2019 8:44 AM GMT (Updated: 13 Dec 2019 8:44 AM GMT)

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் புதிய பங்குகள் நேற்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இப்பங்கு விலை 51 சதவீதம் ஏற்றம் கண்டது.

பங்கு வெளியீடு

சிறிய வங்கித் துறையைச் சேர்ந்த உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. இந்த வெளியீடு இம்மாதம் 2-ந் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 4-ந் தேதி (புதன்கிழமை) நிறைவடைந்தது. அதில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.36-37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அந்த வெளியீட்டில் தகுதி வாய்ந்த பங்குதாரர்களுக்கு ரூ.75 கோடி வரையிலான மதிப்பிற்கு பங்குகள் ஒதுக்கப்பட்டது. மொத்தம் 12.39 கோடி பங்குகள் சந்தைக்கு வந்த நிலையில் 2,054 கோடி பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அது வெளியீட்டு அளவைக் காட்டிலும் ஏறக் குறைய 166 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே வெளியீடு அமோக வெற்றி பெற்றது. பின்னர் ஒரு பங்கின் இறுதி விலை ரூ.37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

பட்டியலிடப்பட்டன

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் தொடக்கத்தில் இப்பங்கு ரூ.58-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.62.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.10-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.55.90-ல் நிலைகொண்டது. வெளியீட்டு விலையுடன் (ரூ.37) ஒப்பிடும்போது இது 51 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தையில் முதலில் இப்பங்கு ரூ.58.75-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.62.80-க்கு சென்றது. இறுதியில் 49 சதவீதம் அதிகரித்து ரூ.55.30-ல் நிலைகொண்டது.

சிறு நிதி வங்கி

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் பங்கு களை வைத்திருக்கும் ஹோல் டிங் நிறுவனம் உஜ்ஜிவான் பைனான்சியல் சர்வீசஸ் ஆகும். இது வங்கியல்லா நிதி நிறுவனமாக 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி முதல் இந்நிறுவனம் சிறு நிதி வங்கியாக செயல்பட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒப்புதல் பெற்றது.

Next Story