9 பெரிய நகரங்களில், மூன்றாவது காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 30% சரிவு


9 பெரிய நகரங்களில், மூன்றாவது காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 30% சரிவு
x
தினத்தந்தி 17 Jan 2020 12:44 PM GMT (Updated: 17 Jan 2020 12:44 PM GMT)

இந்தியாவின் 9 பெரிய நகரங்களில், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 30 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

கூர்கான், நொய்டா

மும்பை, கொல்கத்தா, கூர்கான், நொய்டா, பூனா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் தானே ஆகியவை இந்தியாவின் 9 பெருநகரங்களாகும். இந்த நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 64,034 வீடுகள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 30 சதவீத சரிவாகும். அப்போது விற்பனை 91,464 வீடுகளாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை அதிகபட்சமாக 5,155-ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைவாகும். அடுத்து ஐதராபாத்தில் விற்பனை 44 சதவீதம் சரிந்து 4,372-ஆக இருக்கிறது. பூனாவில் 11,946 வீடுகள் விற்பனை ஆகி இருக்கிறது. நொய்டாவில் விற்பனை 38 சதவீதம் சரிந்து 2,830-ஆக உள்ளது. சென்னையில் 3,015 வீடுகளும், மும்பையில் 25,198 வீடுகளும் விற்பனை ஆகி இருக்கிறது. கூர்கானில் விற்பனை 3,834 வீடுகளாக உள்ளது.

டிசம்பர் காலாண்டில் 9 பெருநகரங்களில் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ள வீடுகளில் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்து 7.97 லட்சமாக இருக்கிறது. முந்தைய காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) அது 7.75 லட்சமாக இருந்தது.

2018 காலண்டர் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகளில் 2.15 லட்சம் வீடுகள் விற்பனை ஆகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 7 சதவீத உயர்வாகும். அதில் பெங்களூரில் அதிகபட்சமாக விற்பனை 38,525 வீடுகளாக உள்ளது.

புள்ளிவிவரங்கள்

இந்திய பெருநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை நிலவரம் குறித்து காலவாரியாக பல்வேறு நிறுவனங்களை புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு நிறுவனமும் மற்றொன்றுடன் முரண்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் அளிக்கப்படும் புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Next Story