ஜனவரி 3 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 7.5% வளர்ச்சி; பாரத ரிசர்வ் வங்கி தகவல்


ஜனவரி 3 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 7.5% வளர்ச்சி;  பாரத ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2020 2:48 PM GMT (Updated: 18 Jan 2020 2:48 PM GMT)

ஜனவரி 3 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 7.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும், வங்கிகள் திரட்டிய டெபாசிட் 9.77 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

புள்ளிவிவரங்கள்

பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ஜனவரி 3 நிலவரப்படி வங்கிகள் வழங்கிய கடன் ஏறக்குறைய ரூ.100 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7.5 சதவீத வளர்ச்சியாகும். அப்போது அது ரூ.93.37 லட்சம் கோடியாக இருந்தது. டிசம்பர் 20 வரையிலான முந்தைய இரண்டு வாரங்களில் ரூ.99.47 லட்சம் கோடியாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 9.77 சதவீதம் உயர்ந்து ரூ.132 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.120.33 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய இரண்டு வாரங்களில் 10 சதவீதம் அதிகரித்து ரூ.130 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவுக் கடன் 6.5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 7.7 சதவீதம் உயர்ந்து இருந்தது. தொழில் கடன் 2.4 சதவீதம் குறைந்து ரூ.27.72 லட்சம் கோடியாக உள்ளது. தனிநபர் கடன் 16 சதவீதம் குறைந்து இருக்கிறது. சேவை துறைக்கான கடன் 4.8 சதவீதம் சரிவடைந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றில் இந்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தனிநபர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் உணவு அல்லா கடனாகும். நெல், கோதுமை கொள்முதலுக்காக இந்திய உணவுக் கழகத்திற்கு வங்கிகள் வழங்குவது உணவுக்கடன் என்று அழைக்கப்படுகிறது.

இக்ரா மதிப்பீடு

கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா, நடப்பு நிதி ஆண்டில் (2019-20) வங்கிகள் வழங்கும் கடன் 6.5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே வளர்ச்சி காணும் என்று மதிப்பீடு செய்துள்ளது. 

Next Story