உஷாரய்யா உஷாரு: ரவுடிகளை நம்பி ஏமாறும் பெண்கள்


உஷாரய்யா உஷாரு:  ரவுடிகளை நம்பி ஏமாறும் பெண்கள்
x
தினத்தந்தி 19 Jan 2020 3:30 AM GMT (Updated: 18 Jan 2020 6:03 PM GMT)

அவள் பிளஸ்-டூ முடித்ததும், அதற்குமேல் படிக்கவைக்க பண வசதியில்லாததால் தொழிற் கல்வி எதையாவது கற்றுக்கொள்ளும்படி பெற்றோர் அவளிடம் கூறினார்கள். அவளது தோழி அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்ததால், இவளும் அங்கு போய் சேர்ந்துகொண்டாள்.

பயிற்சியோடு பணியும் செய்தாள். அடுத்தவர்களை அழகுபடுத்தி பார்க்கும் அந்த பணி அவளுக்கு ஆனந்தம் தருவதாக இருந்தது. பெண்களுக்கான அந்த அழகு நிலையத்தில் பணிபுரிந்த அத்தனை பேரும் பெண்கள்.

பொதுவாக மதிய நேரத்தில் அங்கு வாடிக்கையாளர்களின் வருகை இருக்காது. அது மட்டுமின்றி அப்போது சாலையும் வெறிச்சோடி காணப்படும். அன்று பிற்பகல் மூன்று மணிவாக்கில் அவளும், தோழிகள் இருவரும் மட்டும் பணியில் இருந்தபோது இரண்டு ரவுடிகள் திடீரென்று உள்ளே புகுந்துவிட்டார்கள். உள்ளே நிறைய பணம் இருக்கும் என்ற எண்ணத்தோடு வந்த அவர்கள், ஒரு சில ஆயிரம் ரூபாயே அங்கிருந்து கிடைத்ததால் ஆத்திரமடைந்து, தங்கள் வன்மத்தை அங்கிருந்த மூன்று பெண்கள் மீதும் காட்டினார்கள்.

இரண்டு தோழிகளும் வசமாக தப்பித்து உள்அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார்கள். இவள் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டாள். உயிருக்கு பயந்து கூச்சலிட்டாள். அந்த நேரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த வேற்று மாநில தொழிலாளியான இளைஞனின் காதில் அது விழ, அவன் திடீரென்று உள்ளே புகுந்து சினிமா கதாநாயகன் போன்று அவர்களை அடித்துவீழ்த்தினான். காயத்தோடு அவர்கள் அழகு நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

தன்னை காப்பாற்றிய அவனுக்கு அவள் நன்றி சொன்னாள். அவன் இந்த மாநிலத்திற்கு வேலைக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்ததால், அவனுக்கு இவள் பேசிய மொழி முழுமையாக புரியவில்லை. அவன் திக்கிதிணறி சொன்னதை வைத்து அவனது பெயரை தெரிந்துகொண்டாள். அவன் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா புறநகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரிந்தது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டார்கள். அவன் அந்த பகுதியில் உள்ள சுவீட் கடை ஒன்றில் இனிப்பு தயாரிக்கும் வேலையில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்திருக்கிறான்.

இருவரும் அடிக்கடி பேசினார்கள். அவ்வப்போது சந்தித்தார்கள். அதுவே காதலாகிவிட்டது. அவளை திருமணம் செய்து தன் சொந்த மாநிலத்திற்கு அழைத்துச்செல்ல விரும்புவதாக அவன் தெரிவித்தான். தனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்பதால் அவன் தயங்கிக்கொண்டே இருந்தாள்.

அன்று ஒரு முக்கியமான பண்டிகை தினம். இவள் மட்டுமே அழகுநிலையத்தில் இருந்தாள். அன்று வாடிக்கையாளர்களும் இல்லாததால், பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து அவனை அழைத்தாள். அவனும் வந்தான். அன்று இருவரும் நெருங்கி எல்லைமீறிவிட்டார்கள். அவள் கர்ப்பிணியாகிவிட்டாள். அந்த தகவலை அவனுக்கு சொன்னதும், ‘இதோ இப்போதே திருமணம் செய்துகொள்ளலாம்!’ என்று வாக்குறுதி கொடுத்து, சில வாரங்களை கடத்திய அவன் திடீரென்று காணாமல் போய்விட்டான்.

காத்திருந்ததால் காலம் கடந்துவிட்டது. கர்ப்பத்தையும் கலைக்கமுடியவில்லை. வயிறு பெரிதாகிவிட்டதால் குடும்பத்தினருக்கும் தெரிந்துவிட்டது. அவமானம் சூழ, அவள் கொல்கத்தாவுக்கு தனியாக ரெயில் ஏறிவிட்டாள். அங்கு இறங்கி, கையில் இருந்த ஆதாரங்களைவைத்து அவனது வீட்டை அடையாளங்கண்டாள். அது வீடு போலில்லை. தகரத்தாலும், கோணியாலும் மூடப்பட்ட சிறிய கொட்டகை. உள்ளே ஏழெட்டு பேர் இருந்தார்கள். அந்த கூட்டத்தில் பசியோடு ஒரு இளம்பெண்ணும், இரண்டு குழந்தைகளும் காணப்பட்டார்கள்.

இவளை அவர்கள் வித்தியாசமாக பார்க்க, இவள் மேடான தனது வயிற்றைக்காட்டி அதற்கு காரணமான அவனது பெயரை சொன்னதும் அந்த இளம்பெண் ஆவேசமடைந்து இவளை கண்டபடி தாக்கத்தொடங்கினாள். களேபரமாகிவிட்டது. மக்கள்கூடிவிட்டார்கள்.

சிறிது நேரத்தில் போலீசும் வந்துவிட்டது. அதன் பின்புதான் தாக்கிய பெண் அவனது மனைவி என்பதும், இரண்டு குழந்தைகளும் அவனுக்கு பிறந்தது என்பதும் தெரிந்தது. அதிர்ந்துபோனாள். அவளை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார் அங்குவைத்து விசாரித்தபோது அவள் நிலை குலைந்து மயக்கமாகிவிட்டாள்.

‘அவன் அங்கு நான்கு பேரை கொலை செய்த வழக்கிலும், மத கலவர வழக்கிலும் தொடர்புடையவன் என்றும், போலீசார் அவனை மாநில எல்லைகளை கடந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்’ சொன்ன போலீசார், கொலைகுற்றவாளியை மறைத்துவைத்தவள் என்ற கோணத்தில் சந்தேக கண்கொண்டும் அவளிடம் கடுமையான முறைகளில் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவனோடு இவள் இணைந்திருக்கும் அனைத்து போட்டோக்களையும் பெற்றதோடு, அவளோடு அவன் தொடர்பில் இருந்தபோது பயன்படுத்திய செல்போன் எண்களையும் வாங்கியிருக்கிறார்கள். பின்பு தேவைப்படும்போது விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையோடு அங்குள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கவைத்திருக்கிறார்கள். அவள் கூண்டில் அடைக்கப்பட்ட பறவைபோன்று தவித்துக்கொண்டிருக்கிறாள்.

பெண்களே பின்னணி தெரியாதவர்களை காதலித்தால் நீங்களும் இவ்வளவு பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளாகவேண்டியதிருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

- உஷாரு வரும்.

Next Story